சூரத்: குஜராத் மாநிலம் அகமதாபாத், மகாராஷ்டிர மாநிலம் மும்பை இடையே புல்லட் ரயில் திட்டத்தை மத்திய அரசு கட்டமைத்து வருகிறது. இந்நிலையில் நேற்று சூரத் பகுதியில் கட்டப்படும் ரயில் நிலையத்தை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டார்.
பின்னர் அவர் கூறியதாவது: இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டத்தின் சூரத் மற்றும் குஜராத்தில் உள்ள பிலிமோரா இடையேயான 50 கி.மீ. நீளத்துக்கு 2027-ம் ஆண்டு திறக்கப்படும். மேலும் 2029-ம் ஆண்டுக்கு மும்பை அகமதாபாத் இடையேயான முழுத் திட்டமும் செயல்பாட்டுக்கு வந்துவிடும்.
செயல்பாட்டுக்கு வந்த பிறகு, மும்பை – அகமதாபாத் இடையேயான தூரத்தை சுமார் 2 மணி நேரம் 7 நிமிடங்களில் புல்லட் ரயில் கடந்துவிடும். 2028-ம் ஆண்டுக்குள், தானே – அகமதாபாத் பகுதி முழுவதும் இயக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.