சென்னை: விவசாயிகளை தொழில் முனைவோராக மாற்றி புதிய ஏற்றுமதியாளர்களாக உருவாக்குவோம் என்று சென்னையில் நடைபெற்ற வேளாண் திருவிழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.
தமிழக அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் இரண்டுநாள் வேளாண் திருவிழா மற்றும் வேளாண் கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது. இவ்விழாவை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், 200 அரங்குகள் அடங்கிய கண்காட்சியையும் பார்வையிட்டார்.
அதன்பின் முதல்வர் பேசியதாவது: தமிழகம் வேளாண்மையில் முன்னோடி மாநிலமாக உயர்ந்து வருகிறது. குறுவைசாகுபடிக்கு மேட்டூர் அணையை முன்பைப் போல அல்லாமல் தாமதமின்றி குறித்த நாளில் திறந்து வருகிறோம். இந்த ஆண்டு, 5.66 லட்சம் ஹெக்டரில் நெல் சாகுபடி நடந்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 1 லட்சத்து 28,494 ஏக்கர் கூடுதலாகும். இதற்கு தேவையான உரங்களை, தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
கடந்த 4 ஆண்டுகளில் 456.44 லட்சம் டன் உணவு தானிய உற்பத்தியை எட்டியிருக்கிறோம். பயிர் உற்பத்தித் திறனில் இந்திய அளவில் முதலிடம். மக்காச்சோளம், எண்ணெய் வித்துக்கள் மற்றும் கரும்பு உற்பத்தியில் இரண்டாம் இடம். குறு தானியங்கள் மற்றும் நிலக்கடலை உற்பத்தியில் மூன்றாம் இடம் பிடித்துள்ளோம்.
‘கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்’ மூலம் கடந்த 4 ஆண்டுகளில், 10,187 கிராம ஊராட்சிகளில், 52 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். 47 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்களை மீண்டும் சாகுபடிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் திட்டத்தில், இதுவரை 20 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
கடந்த 4 ஆண்டுகளில், தமிழகத்தில் அதிகபட்சமாக 130 லட்சம் டன் வேளாண் விளைபொருட்கள், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் பொருளீட்டுக் கடன் ரூ.3 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில், மஞ்சள் ஏற்றுமதி மையம், 14 புதிய உழவர் சந்தைகள், நீலகிரியில் சிறுதானியங்கள் பதப்படுத்தும் நிலையம், கொல்லிமலையில் மிளகு பதப்படுத்தும் மையம், தஞ்சாவூர் மாவட்டத்தில் தென்னை மதிப்புக் கூட்டு மையம், களக்காட்டில் வாழை ஏலமையம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் புதிதாக தொழில் தொடங்குவதற்கு ரூ.53 கோடி மானியம் வழங்கப்படுகிறது.கங்கைகொண்டானில் மெகா உணவுப் பூங்கா, ‘தமிழ்நாடு முந்திரி வாரியம்’, இயற்கை இடர்களால் பாதிக்கப்பட்ட 21 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,630 கோடி நிவாரணம், பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் 32 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,720 கோடி இழப்பீடு, நாகப்பட்டினம், சிவகங்கை, கரூர் ஆகிய மாவட்டங்களில் 3 புதிய அரசு வேளாண் கல்லூ
ரிகள் அமைப்பு போன்ற பல்வேறுசாதனைகளை நிகழ்த்தியுள்ளோம். விவசாயிகளை தொழில் முனைவோராக மாற்றி புதிய ஏற்றுமதியாளர்களாக உருவாக்குவோம். இவ்வாறு பேசினார்.
விழாவில், அமைச்சர்கள் : எம்ஆர்கே பன்னீர்செல்வம், கே.என். நேரு, தா.மோ.அன்பரசன், கோவி.செழியன், வேளாண் துறை செயலர் வி.தட்சிணாமூர்த்தி, ஆணையர் டி.ஆபிரகாம், வேளாண் இயக்குநர் பா.முருகேஷ் தோட்டக்கலைத் துறை இயக்குநர் பெ.குமாரவேல் பாண்டியன், சர்க்கரைத் துறை இயக்குநர் த.அன்பழகன், வேளாண்மை பொறியியல் துறை தலைமை பொறியாளர் ஆர். முருகேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.