சென்னை: முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 19,476 வாக்காளர்கள் சந்தேகத்துக்குரியவர்களாக இருக்கிறார்கள். 9,133 வாக்காளர்கள் போலி முகவரியில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பாஜக எம்பி அனுராக் தாக்கூர் அண்மையில் பேசியிருந்தார். இதையடுத்து, தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விசாரணை மேற்கொண்டது. பின்னர், இது தவறான தகவல் என விளக்கமும் அளித்திருந்தது.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 19,476 வாக்காளர்கள் சந்தேகத்துக்குரியவர்களாக இருப்பதாகவும், இந்த விவகாரம் குறித்து, விசாரணை நடத்தி, தீர்வு கான வேண்டும் என தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் கடிதம் கொடுத்துள்ளார்.
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: 2023 மற்றும் 2024 ஆண்டுகளுக்கான வாக்காளர் தரவு பகுப்பாய்வில் கொளத்தூர் தொகுதியில் மொத்தம் 19,476 வாக்காளர்கள் சந்தேகத்துக்குரிய வாக்காளர்களாக கருதப்படுகின்றனர். 4,370 இரட்டை வாக்காளர் பதிவுகளும், போலி முகவரியுடன் 9,133 வாக்காளர்களும் உள்ளனர்.
குறிப்பாக, வீட்டு எண் 11, வாக்குச்சாவடி எண் 84-ல் 30 வாக்காளர் அடையாள அட்டைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 5,964 வாக்காளர்கள் தொடர்பில்லாத வீடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். எனவே, கொளத்தூர் தொகுதியில் உடனடியாக தணிக்கை மேற்கொண்டு, போலி வாக்காளர்களை நீக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல், வாக்காளர் அடையாள அட்டை சிறப்பு தீவிர புதுப்புத்தல் பணிகளையும் தொடங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.