சண்டிகர்: இந்தியா – ரஷ்யா இடையே நிலவும் நீண்ட கால உறவுக்கு ஓய்வு பெறும் மிக்-21 போர் விமானங்களே சாட்சியாக உள்ளன என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதத்துடன் கூறினார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா விமர்சித்து, இந்தியா மீது 50 சதவீத வரிவிதித்தது. இந்நிலையில் விமானப்படையில் கடந்த 1960-ம் ஆண்டு இணைந்து 60 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய மிக்-21 போர் விமானங்களுக்கு பிரியாவிடை அளிக்கும் நிகழ்ச்சி சண்டிகரில் நேற்று நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். முப்படை தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான், ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, கடற்படைத் தளபதி தினேஷ் கே.திரிபாதி, விமானப்படை தளபதி ஏ.பி.சிங் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் இந்தியாவின் போர்களில் மிக்-21 போர் விமானங்கள் முக்கிய பங்காற்றியது குறித்து எடுத்துரைக்கப்பட்டன. 1965 மற்றும் 1971-ம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தான் போர், 1999-ம் ஆண்டு கார்கில் போர், 2019-ல் நடத்தப்பட்ட பாலகோட் தாக்குதல் ஆகியவற்றில் மிக்-21 போர் விமானங்கள் முக்கிய பங்காற்றின.
பல ஆண்டுகாலம் சேவை புரிந்து பழமையானதால் இந்த விமானங்களில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு விபத்தை சந்தித்தன. இதனால் மிக்-21 போர் விமானத்துக்கு ‘பறக்கும் சவப்பட்டி’ என்ற பெயர் கிடைத்தது. இந்த போர் விமானங்களை நவீன காலத் தேவைக்கேற்ப மேம்படுத்துவதிலும் சிக்கல்கள் ஏற்பட்டன.
ஜாக்குவார், மிராஜ், சுகோய், தேஜஸ், ரஃபேல் என அடுத்த தலைமறை போர் விமானங்கள் விமானப்படையில் இணைக்கப்பட்டதால், பழமையான மிக்-21 போர் விமானங்களுக்கு ஓய்வு அளிக்க விமானப்படை முடிவு செய்தது. இந்தியப் போர்களில் முக்கிய பங்காற்றிய மிக்-21 போர் விமானங்களுக்கு கவுரவமான முறையில் பிரியாவிடை அளிக்கவும் மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான பிரியாவிடை நிகழ்ச்சி சண்டிகரில் நேற்று நடைபெற்றது. இதில் மிக்-21 போர் விமானங்களின் அணி வகுப்பும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: இந்தியாவின் வரலாற்று சிறப்பு மிக்க போர்களில் எல்லாம், மிக்-21 ரக போர் விமானங்கள் பங்கேற்று நமது நாட்டின் பெருமையை உயர்த்தின. கடந்த 1971-ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடைபெற்ற போரை யாரால் மறக்க முடியும்? தாகாவில் உள்ள ஆளுநர் இல்லத்தின் மீது மிக்-21 போர் விமானம் துல்லிய தாக்குதல் நடத்தி, அதே நாளில் வெற்றி கிடைக்க வழிவகுத்தது.
பல தருணங்களில் மிக்-21 போர் விமானம் தனது திறனை நிரூபித்துள்ளது. அதனால் இந்த பிரியாவிடை நிகழ்ச்சி நமது நாட்டின் பெருமை, வலிமை, தியாகம், சிறப்பு ஆகியவற்றையெல்லாம் நினைவு கூர்கின்றன. மிக்-21 வெறும் விமானம் மட்டும் அல்ல. இது இந்தியா – ரஷ்யா இடையிலான நீண்ட மற்றும் ஆழமான உறவுக்கு சான்றாக உள்ளன. இவ்வாறு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.