சென்னை: பள்ளி காலாண்டுத் தேர்வு விடுமுறை மற்றும் ஆயுதபூஜை விடுமுறையையொட்டி 3,380 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:
செப்.26, 27, 29, 30 தேதிகளில்… பள்ளி காலாண்டுத் தேர்வு விடுமுறை மற்றும் ஆயுதபூஜை விடுமுறையையொட்டி செப்.26, 27, 29, 30 ஆகிய தேதிகளில் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 2,430 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 400 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 250 பேருந்துகளும் இயக்கப்படும்.
பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 300 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 3,380 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல், விடுமுறை முடிந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக அக்.4, 5-ம் தேதிகளில் அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க அனைத்து நிலையங்களிலும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வார இறுதியில் பயணிக்க இதுவரை 57 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
சிறப்பு கண்காணிப்புக் குழு: இதற்கிடையே, ஆயுதபூஜை விடுமுறையையொட்டி தனியார் ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் அதைத் தடுக்க தமிழகம் முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து சோதனைச்சாவடி ஆய்வாளர்கள் ஆகியோரைக் கொண்டு சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிக் கப்பட்டது தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து ஆணையர் இரா.கஜலட்சுமி தெரிவித்துள்ளார்.