ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள நூற்பாலையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 31 பேரை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒட்டன்சத்திரம் அருகே வாகரையில் உள்ள ஒரு தனியார் நூற்பாலையில் சட்டவிரோதமாக தங்கிப் பணிபுரிந்து வந்த 31 பேரை மே 24-ம் தேதி கள்ளிமந்தையம் போலீஸார் கைது செய்தனர். இதில் ஒரு சிறுவனை மட்டும் மதுரை சிறுவர்கள் காப்பகத்திலும், மற்ற 30 பேரை சென்னை புழல் சிறையிலும் அடைத்தனர்.
இவ்வழக்கில் சிறுவன் உட்பட 2 பேருக்கு 115 நாட்கள், மீதமுள்ள 29 பேருக்கு 125 நாட்கள் சிறைத் தண்டனை மற்றும் அனைவருக்கும் தலா ரூ.100 அபராதமும் விதிக்கப்பட்டது. இவ்வழக்கு ஒட்டன்சத்திரம் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று விசாரணை நிறைவடைந்த நிலையில் 31 பேரின் சிறைக் காலத்தை தண்டனைக் காலமாக அறிவித்தும், ஒவ்வொருவருக்கும் தலா ரூ.100 அபராதம் விதித்தும் நீதிபதி கபாலீஸ்வரன் தீர்ப்பளித்தார்.
இதையடுத்து, சிறுவனை திண்டுக்கல் காந்தி கிராம காப்பகத்திலும், மற்ற 30 பேரையும் மதுரை சிறையிலும் அடைத்தனர். இவர்களை நாடு கடத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேபோல, திண்டுக்கல் மாவட்டத்தில் பிற நாடுகளைச் சேர்ந்தோர் தங்கியிருந்தால், அவர்கள் மீதுசட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.