சென்னை: அக்டோபர் மாதத்துக்கான 20.22 டி.எம்.சி தண்ணீர் தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 44-வது கூட்டம், ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு உறுப்பினர் மற்றும் நீர்வளத்துறை செயலர் ஜெ.ஜெயகாந்தன், காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் பன்மாநில நதிநீர்ப் பிரிவு தலைவர் இரா.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தமிழ்நாடு உறுப்பினர் மற்றும் நீர்வளத்துறை செயலர் ஜெ.ஜெயகாந்தன், செப்.25-ம் தேதி மேட்டூர் அணையின் நீர் இருப்பு 92.105 டி.எம்.சி-ஆக உள்ளது என்றும், அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 8,419 கன அடியாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
கணிசமான நீர் இருப்பு: மேலும், கர்நாடக அணைகளின் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்து கணிசமான அளவு தொடர்ந்து வருவதால், தமிழகத்துக்கு இந்தாண்டு அக்டோபர் மாதத்துக்கு வழங்கப்பட வேண்டிய நீர் அளவான 20.22 டி.எம்.சி. நீரினை உச்ச நீதிமன்ற ஆணையின்படி கர்நாடகம் பில்லிகுண்டுலுவில் உறுதிசெய்ய தமிழ்நாடு சார்பில் ஆணையத்திடம் வலியுறுத்தினார்.
மேலாண்மை ஆணைய தலைவர் இதனை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டார். கர்நாடகத்துக்கு இதுகுறித்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.