அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் பாக்கு மரக்கன்றுகள் நடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நடப்பாண்டில் புதிதாக சுமார் 1 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.
தருமபுரி மாவட்டத்தில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களே பிரதானமாக உள்ளது. மாவட்டத்தில் உள்ள மொத்த பரப்பளவான 4 லட்சத்து 50 ஆயிரம் ஹெக்டேரில் 1 லட்சத்து 95 ஆயிரத்து 740 ஹெக்டேர் சாகுபடி பரப்பாக உள்ளது. குறிப்பாக அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதி ஓரளவு நீர்வளம் மற்றும் மண்வளம் மிக்கதாக இப்பகுதி மக்கள் விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தென்பெண்ணை ஆற்று நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள மொரப்பூர், இட்லப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் வாணியாறு அணை மற்றும் அதன் கால்வாய்கள் செல்லும் பகுதிகளான மோளையானூர், பாப்பிரெட்டிப்பட்டி, பூனையானூர், மஞ்சவாடி, பாப்பம்பாடி, புதுப்பட்டி, வள்ளி மதுரை அணைக்கட்டு அமைந்துள்ள கீரைப்பட்டி, அச்சல் வாடி, தாதரவலசை, வாச்சாத்தி, வீரப்பநாய்க்கன் பட்டி, தாதம்பட்டி, தென்கரைக்கோட்டை, ராமியம் பட்டி, தீர்த்தமலை உள்ளிட்ட பகுதிகளில் பாக்கு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கடந்த 4 ஆண்டுகளாக நல்ல மழை பெய்து வருவதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து நீர் பற்றாக்குறை நீ்ங்கியுள்ளது. ஆனால், விவசாயப் பணிக்கான கூலி ஆட்கள் பற்றாக்குறை, போதிய வருவாய் இல்லாமை உள்ளிட்டவற்றால் பாக்கு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து பாக்கு விவசாயிகள் கூறும்போது, பராமரிப்பு குறைவு, குத்தகைக்கு விடுவதால் லாபகரமான நிரந்தர வருவாய் ஆகியவற்றின் காரணமாக பாக்குமரக்கன்று நடுவதில் விவசாயிகள் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். 5 முதல் 6 ஆண்டுகளில் பயன் தரக்கூடிய பாக்கு மரங்களால் ஏக்கருக்கு ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.3 முதல் ரூ.5 லட்சம் வரை வருவாய் கிடைக்கும் வாய்ப்புள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சுமார் 3 லட்சத்திற்கும் மேலான பாக்கு கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. தற்போது இளங்கன்றுகளை வெயிலில் இருந்து காக்க வாழை கன்று பக்க கன்றாக வளர்த்து, ஓராண்டு காலத்திற்கு பாதுகாத்து பின்னர் கன்றுகளை பராமாித்து வருகின்றனர், என்றனர்.
இதுகுறித்து தோட்டக்கலை அதிகாரிகள் கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் பாக்கு நடவு அதிகரித்துள்ளது. அதிலும் கடந்த ஜீன் மாதத்திற்கு பிறகு சுமார் 125 ஏக்கரில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட இளங்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இவை இன்னும் 3 முதல் 5 ஆண்டுகளில் பலன் தரும் நிலையில் பாக்கு உற்பத்தியும் அதிகரிக்க கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதிலும் மலையடி வாரங்களை ஒட்டி அமைந்துள்ள கிராமங்களில் நீர் தட்டுப்பாடு குறைவு என்பதால் அப்பகுதிகளில் தற்போது விவசாயிகள் அதிக ஈடுபாடு காட்டி வருகின்றனர், என்றனர்.