சென்னை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் முன்பாக கோயில் நிதியில் வணிக வளாகம் கட்டுவதை எதிர்த்து ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவரான மயிலாப்பூரைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்குகள் மீதான விசாரணை நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்து வருகிறது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வணிக வளாகம் கட்டுவதற்குப் பதிலாக அந்த இடத்தில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வரிசையில் நின்று செல்ல க்யூ காம்ப்ளக்ஸ் மற்றும் காத்திருப்பு மையமாக அதை மாற்றியு்ள்ளதாக அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப் பட்டது. அதையடுத்து நீதிபதிகள் அதுதொடர்பான வரைபடம் மற்றும் தொழில்நுட்ப அறிக்கைகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் இதே அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ஆர்.ஆர்.அருண் நடராஜன், ராஜகோபுரத்தின் வெளியே க்யூ காம்ப்ளக்ஸ் கட்டுவதற்கான திட்ட அறிக்கையை தாக்கல் செய்தார். தொழில்நுட்ப அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் கோரினார்.
அப்போது நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த மனுதாரான டி.ஆர்.ரமேஷ், ராஜகோபுரத்தின் எதிரே உள்ள 16 கால் மண்டபத்துக்கு அருகில் பக்தர்களுக்கான க்யூ காம்ப்ளக்ஸ் கட்டுவதாக கூறுகின்றனர். அவ்வாறு கட்டினால் சுவாமி புறப்பாடு மற்றும் பூஜைகளுக்கு இடையூறு ஏற்படும். ராஜகோபுரத்துக்கு எதிரே வெற்றிடமே இருக்காது. ஆனால் ஏற்கெனவே கோயிலுக்கு உள்ளே நான்காம் பிரகாரம் பகுதியில் சுற்றுச்சுவருக்கு அருகில் ஏற்கெனவே பக்தர்களுக்கான க்யூ காம்ப்ளக்ஸ் மற்றும் காத்திருப்பு மையத்தை கட்டி வருகின்றனர்.
100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த தொல்லியல் சிறப்பு மிக்க இ்த்தலத்தில் இதுபோன்ற கட்டுமானங்களை கட்டும் முன்பாக தொல்லியல் துறையிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால் அதுபோன்ற அனுமதி பெற்றார்களா எனத் தெரியவில்லை எனக்கூறி, கோயில் வளாகத்தில் நடைபெறும் கட்டுமானப் பணிகள் தொடர்பான தற்போதைய புகைப்பட ஆதாரங்களை நீதிபதிகளிடம் காண்பித்தார்.
அந்தப் புகைப்படங்களைப் பார்த்த நீதிபதிகள், கோயிலுக்கு உள்ளே நடைபெறும் க்யூ காம்ப்ளக்ஸ் கட்டுமானப் பணிகள் குறித்த தகவலை ஏன் முன்கூட்டியே எங்களுக்கு தெரிவிக்கவில்லை என்றும், அதை மறைக்க வேண்டிய அவசியம் என்ன என்றும் அறநிலையத் துறைக்கு கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து நீதிபதிகள், அறநிலையத் துறையின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவி்த்து சரமாரியாக கேள்வி எழுப்பினர். பின்னர் அண்ணாமலையார் கோயிலுக்கு உள்ளே மற்றும் வெளியே எந்த கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என இடைக்காலத் தடை விதித்து வழக்கு விசாரணையை வரும் அக்.16-க்கு தள்ளி வைத்துள்ளனர்.
அன்றைய தினம், கோயில் உள்ளே மற்றும் வெளியே நடைபெறும் கட்டுமானப் பணிகளுக்கான அவசியம் குறி்த்தும், தொல்லியல் ரீதியாக எந்த பாதி்ப்பும் ஏற்படவில்லை என்பது குறித்தும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டுள்ளனர். மேலும் அக்.5 அன்று அண்ணாமலையார் கோயிலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யவுள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.