ஜிஎஸ்டி கவுன்சிலை புறக்கணித்து பிரதமர் மோடி கொண்டு வந்த வரி விகித மாற்றத்தால் மாநிலங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என குழித்துறையில் நடந்த மாதர் சங்க மாநாட்டில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 17-வது மாநில மாநாடு குமரி மாவட்டம் குழித்துறையில் நேற்று முன்தினம் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் என்.உஷாபாசி தலைமையில் நடந்தது.
மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேறற கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது: திருவள்ளுவர், மகாகவி சுப்பரமணிய பாரதி, ஈவேரா, அய்யா வைகுண்டர், ராமலிங்க அடிகளார், ஸ்ரீ நாராயண குரு, முத்து லெட்சுமி ரெட்டி போன்றவர்களின் முயற்சிகளால் தான் பெண்களுக்கு காலத்துக்கு ஏற்ற முன்னேற்றம் சாத்தியமானது. இவர்களைத் தொடர்ந்து வந்த இடது சாரி முற்போக்கு அமைப்புகள் சமூக கொடுமைகள், பொருளாதார சுரண்டல்களை முடிவுக்கு கொண்டுவர அப்போராட்டங்களை முன்னெடுத்தன. இந்த மாநாட்டில் அந்த வரலாறுகள் நினைவு கூரப்பட வேண்டும்.
2014-ல் அதிகாரத்துக்கு வந்த மோடி பெண்களுக்கு எதிரான தாக்குதல் இல்லாமல் செய்வதாக கூறினார். ஆனால், பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் கடந்த பத்தாண்டுகளில் 70 சதவீததம் அதிகரித்துள்ளன. இவற்றில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை. மாறாக தண்டிக்கப் பட்டவர்களை கூட பாராட்டி மாலையிட்டு வரவேற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கத்வா, பத்ராஸ், உன்னாவோ சம்பங்கள் நாட்டையே அதிர்ச்சி அடைய வைத்தன.
நாடு முழுவதும் கடந்த ஐந்தாண்டுகளில் பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் 46 சதவீதம் அதிகரித்துள்ளன. ஒவ்வொரு நாளும் 10-க்கும் அதிகமான பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாவதாக தேசிய குற்ற ஆவண புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. உத்திரபிரதேசம் இதில் முன்னிலையில் உள்ளது. அமெரிக்காவில் உள்ள 21 சதவீதம் எச்1 பி விசா பெற்ற இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு எதிராக குரல் எழுப்பவும் திரானி அற்றதாக நமது நாடு மாறி உள்ளது.
மாநிலங்களுக்கு பாதிப்பு: மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜிஎஸ்டி வரி குறைப்பால் மாநிலங்கள் பெரும் பாதிப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில் தான் வரி மாற்றத்தை கொண்டுவர வேண்டும். ஆனால் பிரதமரே அது குறித்து அறிவிக்கிறார்.
ஜிஎஸ்டி வரி விகித மாற்றம் குறித்து கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் முன்வைத்த கோரிக்கைகள் எதையும் மத்திய அரசு பரிசீலிக்கவில்லை. ஜிஎஸ்டி வரி குறைப்பின் பயன் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை. தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் அடைந்துள்ள முன்னேற்றங்களுக்கு தடைக்கல்லாக இது அமையும்” இவ்வாறு அவர் பேசினார்.
மாநாட்டில் மாதர் சங்கத்தின் அகில இந்திய தலைவரான கேரள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீமதி, அகில இந்திய துணைத் தலைவர் வாசுகி, துணைச் செயலாளர்கள் சுதா சுந்தரராமன், பி.சுகந்தி, மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, பொதுச்செயலாளர் அ.ராதிகா, மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.லீமாறோஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாநாட்டு நிகழ்ச்சிகள் நாளை (27-ம் தேதி) வரை நடைபெறுகிறது.