இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் 2 தீவிரவாதிகள் மற்றும் ஓர் ஆயுத விநியோகஸ்தரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து மணிப்பூர் மாநில காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது: இம்பால் மேற்கு மாவட்டம் பானா பஜார் பகுதியில், தடை செய்யப்பட்ட பிரெபெக் என்ற தீவிரவாத அமைப்பின் ஓர் உறுப்பினரை போலீஸார் கைது செய்துள்ளனர். காக்சிங் மாவட்டத்தில் ஒருவரை மிரட்டி ரூ.5 ஆயிரம் பறித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுபோல விஷ்ணுபூர் மாவட்டம் ட்ராங்லோபி பகுதியில், தடை செய்யப்பட்ட மக்கள் விடுதலைப் படை அமைப்பைச் சேர்ந்த மற்றொருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுதவிர, இம்பால் மேற்கு மாவட்டத்தில் ஆயுத விநியோகஸ்தர் ஒருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து 9 மி.மீ. பிஸ்டல் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் காக்சிங் மாவட்டம் கைபுங் பகுதியில் ஐஇடி பாகங்களை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றி உள்ளனர். 1.7 கிலோ கன்டெய்னர், 3 கிலோ மணல், 470 கிராம் வெடிபொருள், 12 ஸ்க்ரூ, 1 எலக்ட்ரிக் டெட்டனேட்டர் உள்ளிட்டவை அதில் இருந்தன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.