துபாய்: நடப்பு ஆசிய கோப்பை தொடரில் இந்திய மற்றும் வங்கதேசத்துக்கு இடையிலான ‘சூப்பர் 4’ சுற்று போட்டி கடந்த 24-ம் தேதி நடைபெற்றது. இதில் பந்து வீசிய இந்திய அணியின் வருண் சக்கரவர்த்தி, தனது முதல் 8 பந்துகளில் 21 ரன்களை விட்டுக் கொடுத்தார். அதன் பின்னர் அவர் வீசிய 16 பந்துகளில் வெறும் 8 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்த போட்டிக்கு பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வருண் பகிர்ந்து கொண்டது. “பவர்பிளே ஓவர்களில் விக்கெட் வீழ்த்துவது மட்டுமே குறிக்கோள். சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்து, அதை சற்று திரும்ப செய்வதுதான் எனது பணி. அந்தவொரு பந்தை வீசவே நான் முயற்சிப்பேன்.
அதில் ரன்கள் கொடுத்தாலும் அட்டாக்கிங் பாணியில் பந்து வீசி, விக்கெட் வீழ்த்த முயற்சிப்பேன். ஆட்டத்தின் தொடக்கத்தில் பந்து அதிகம் ஸ்கிட் ஆகிறது. பவர்பிளே முடிவுக்கு பிறகு பீல்ட் செட்-அப் மைதானத்தில் விரிவடைகிறது. அது எங்களுக்கு இன்னும் சிறப்பாக அமைகிறது.
கடந்த ஐபிஎல் சீசனுக்கு பிறகு டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் விளையாடினேன். அதன் பின்னர் அதிகம் பயிற்சி செய்தேன். எனது பேட்டிங் மற்றும் பீல்டிங்கிலும் இப்போது கவனம் செலுத்தி வருகிறேன்” என்றார்.
நடப்பு ஆசிய கோப்பை தொடரில் 4 போட்டிகளில் விளையாடி, 4 விக்கெட்டுகளை வருண் கைப்பற்றி உள்ளார். இந்த தொடரில் அவரது எகானமி ரேட் 6.80 என உள்ளது.