சென்னை: தமிழகம் முழுவதும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உரிய காலத்தில் மேற்கொள்ள வேண்டும், பழைய நிலை இந்த ஆண்டும் தொடரக்கூடாது என தமிழக அரசுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக மழைக்காலத்தின் போது, சென்னையில் பல இடங்களில் மழைநீர் வடியாமல் தேக்கமடைந்ததால் சுகாதாரத்திலும், போக்குவரத்திலும் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர்.
சென்னை மட்டுமல்ல திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, கடலூர் என பல மாவட்டங்களில் மழைக்காலத்தில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதற்கெல்லாம் காரணம், தமிழக அரசு மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உரிய காலத்தில் முறையாக மேற்கொள்ளாதது தான்.
அதே நிலை இந்த ஆண்டும் தொடரக்கூடாது. எனவே, இந்த ஆண்டிலாவது மழைக்கால பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உரிய காலத்தில் தொடங்க வேண்டும். மழைக்காலம் தொடங்கிவிட்டதால் பொது மக்களை பாதுகாக்கும் வகையில் திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும்.
அந்தவகையில், தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் சாலை வசதி, மின்சார இணைப்பு, அரசுப் பேருந்துகளில் மேற்கூரை, மரங்கள், அரசின் கட்டிடங்கள், கல்வி நிறுவனக் கட்டிடங்கள், நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் என அனைத்து இடங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
முக்கியமாக, வடிகால் பணிகள், சுகாதாரப் பணிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். தமிழகம் முழுவதும் மழைக்காலத்தில் ஏற்படும் புயல், வெள்ளத்தில் தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.
பொதுமக்கள் மழையால் பாதிக்கப்படாமல் இருக்க ஏற்கனவே தொடங்கி இன்னும் முழுமையடையாமல் இருக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் காலம் தாழ்த்தாமல் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.