துபாய்: ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இன்று இரவு இந்தியா – இலங்கை அணிகள் துபாயில் மோதுகின்றன.
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. சூப்பர் 4 சுற்றில் முதல் இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விட்டது.
சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்து இருந்தது. நேற்று முன்தினம் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் வங்கதேச அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. இந்நிலையில் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்திய அணி இன்று இலங்கையுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 8 மணிக்கு துபாயில் நடைபெறுகிறது.
சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணி 2 ஆட்டங்களில் தோல்வி அடைந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது. அந்த அணி வங்கதேசத்திடம் 4 விக்கெட் வித்தியாசத்திலும், பாகிஸ்தானிடம் 5 விக்கெட் வித்தியாசத்திலும் தோல்வி அடைந்திருந்தது. இன்றைய ஆட்டம் இறுதிப் போட்டிக்கான சிறந்த பயிற்சியாக இந்திய அணிக்கு அமையக்கூடும்.
இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டதால் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ஜிதேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்படக்கூடும். அதேவேளையில் ஜஸ்பிரீத் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்க வாய்ப்பு உள்ளது. இது ஒருபுறம் இருக்க நடப்பு தொடரில் இந்திய அணியின் பீல்டிங்கில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மொத்தம் 10 கேட்ச்களை தவறவிட்டுள்ளனர். இதில் வங்கதேச அணிக்கு எதிராக தவறவிட்ட 4 கேட்ச்களும் அடங்கும். இறுதிப் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதனால் பீல்டிங்கில் இந்திய அணி கூடுதல் கவனம் செலுத்துவதில் முனைப்பு காட்டக்கூடும்.