லக்னோ: இந்தியா ‘ஏ’ – ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி 420 ரன்களும், இந்தியா ‘ஏ’ அணி 194 ரன்களும் எடுத்தன. 226 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 7.5 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 16 ரன்கள் எடுத்தது.
நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி 46.5 ஓவர்களில் 185 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் நேதன் மெக்ஸ்வீனி 149 பந்துகளில், ஒரு சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 85 ரன்களும், ஜோஷ் பிலிப் 48 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 50 ரன்களும் எடுத்தனர்.
இந்தியா ‘ஏ’ அணி தரப்பில் கர்னூர் பிரார், மானவ் சுதார் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். முகமது சிராஜ், யாஷ் தாக்குர் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.
இதையடுத்து 412 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்தியா ‘ஏ’ அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 41 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. நாராயண் ஜெகதீசன் 36 ரன்களில் டாட் மர்பி பந்தில் ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுல் 92 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் எடுத்த நிலையில் ‘ரிட்டயர்டு ஹர்ட்’ முறையில் வெளியேறினார். தேவ்தத் படிக்கல் 5 ரன்களில் டாட் மர்பி பந்தில் போல்டானார்.
சாய் சுதர்சன் 44 ரன்களும், மானவ் சுதார் ஒரு ரன்னும் சேர்த்து களத்தில் இருந்தனர். கைவசம் 8 விக்கெட்கள் இருக்க மேற்கொண்டு வெற்றிக்கு 243 ரன்கள் தேவை என்ற நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டத்தை சந்திக்கிறது இந்தியா ‘ஏ’ அணி.