புதுடெல்லி: இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரியை விதித்துள்ளது. இதனால், இந்திய இறால் ஏற்றுமதியாளர்கள் அந்த நாட்டுடன் வர்த்தகம் மேற்கொள்ள இயலாத நிலையில் சீனா கைகொடுத்துள்ளது.
இதுகுறித்து கிங்ஸ் இன்ஃப்ரா வென்ச்சர்ஸ் லிமிடெட்டின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ஷாஜி பேபி ஜான் கூறியதாவது: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் விதித்துள்ள கூடுதல் வரி அமெரிக்க சந்தையில் இந்தியாவின் போட்டித்தன்மையைக் கடுமையாக குறைத்துள்ளது.
ட்ரம்பின் இந்த நடவடிக்கை அமெரிக்க சந்தையில் ஈக்வடார், வியட்நாம், இந்தோனேசியா ஏற்றுமதிகளை விட இந்திய இறால்களை அதிக விலை கொண்டாதாக மாற்றியுள்ளது. இதனால் அங்கிருந்து வரும் ஏற்றுமதி ஆர்டர்கள் குறைந்துள்ளன. இந்த பாதிப்பை தவிர்க்க இந்திய சப்ளையர்கள் சீனா மற்றும் பிற ஆசிய சந்தைகளில் ஏற்றுமதிக்கான வர்த்தக வாய்ப்புகளைப் பெறுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சீனாவில் உள்நாட்டு தேவை வலுவாக உள்ளதால் இந்திய இறால்களுக்கு அங்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. இது, துரதிர்ஷ்டமான நிலையிலும் அதிர்ஷ்டமாக கிடைத்த நன்மையாகவே பார்க்கப்படுகிறது.
முன்னர் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்திய இறால்களை இறக்குமதி செய்யும் இரண்டாவது பெரிய நாடாக சீனா இருந்தது. ஆனால், இப்போது அது முன்னணி இறக்குமதியாளராக உருவெடுக்கும் வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. வரி இல்லாத நாடுகளின் சந்தைகளுக்கு பதப்படுத்தி ஏற்றுமதி செய்வதற்காக இந்தியாவிலிருந்து அதிக அளவிலான இறால்களை சீனா இறக்குமதி செய்வதில் அதிக ஆர்வமாக உள்ளது.
அமெரிக்காவை சார்ந்திருப்பதை குறைக்க ஐரோப்பா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜப்பான், தென்கொரியா போன்ற பிற நாடுகளின் சந்தைகளை கைப்பற்றுவதில் இந்திய இறால் ஏற்றுமதியாளர்கள் தீவிரமாக உள்ளனர்.
அதேநேரம் அமெரிக்க ஒப்பந்தங்களை வைத்துள்ள இந்திய ஏற்றுமதியாளர்கள் கட்டண சுமையை பகிர்ந்து கொள்ள அங்குள்ள இறக்குமதியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். டெல்லி-என்சிஆர், பெங்களூரு, ஹைதராபாத் போன்ற பல்வேறு நகங்களின் உள்நாட்டு சந்தைகளிலும் இறால் விற்பனை கணிசமான அளவில் அதிகரித்து வருகிறது. இவ்வாறு ஜான் கூறினார்.