உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள கறிக்கோழி நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3-வது நாளாக நேற்றும் சோதனை மேற்கொண்டனர். உடுமலையில் செயல்பட்டு வரும் தனியார் கறிக்கோழி நிறுவனத்துக்கு பல மாநிலங்களில் கிளை அலுவலகங்கள் உள்ளன.
கடந்த 23-ம் தேதி உடுமலையில் உள்ள அலுவலகம், தீவன உற்பத்தி ஆலை, கணபதிபாளையத்தில் உள்ள இல்லம் ஆகியவற்றில் 20-க்கும் மேற்பட்ட வருமான வரி துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஆய்வைத் தொடங்கினர். இந்நிலையில், 3-வது நாளாக நேற்றும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இரண்டாம் நாளான நேற்று முன்தினம் நடைபெற்ற சோதனையின்போது இரவு 9 மணியாகியும் பெண் ஊழியர்கள் உள்ளிட்டோரை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் பெண் ஊழியர்களின் குடும்பத்தினர் கைக்குழந்தைகளுடன் அலுவலகத்துக்கு வந்தனர்.
இதையடுத்து பெண் ஊழியர்கள் மட்டும் வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். நேற்று அதிகாலை 5 மணி வரை சோதனை தொடர்ந்தது. பின்னர் நேற்று 3-வது நாளாக காலை 10 மணியளவில் தொடங்கிய சோதனை இரவு வரை நீடித்தது. வரும் செப். 27-ம் தேதி வரை சோதனை நடைபெறும் என்று வருமான வரித் துறை அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.