சென்னை: ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகம், மந்தைவெளி 5-வது ட்ரஸ்ட் குறுக்குத் தெருவில் உள்ள நடிகர் எஸ்.வி.சேகரின் வீடு ஆகிய இரு இடங்களுக்கு நேற்று குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் போலீஸார் அங்கு சென்று தீவிர சோதனை நடத்தினர்.
ஆனால், சந்தேகப்படும்படியான எந்த பொருளும் கண்டெடுக்கப்படாததால், இது புரளி என உறுதி செய்யப்பட்டது. நேற்று முன்தினம் தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள இந்திய கடற்படை நிர்வாக அலுவலகம், நந்தம்பாக்கம் வர்த்தக மையம், புரசைவாக்கத்தில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம், தேனாம்பேட்டையில் உள்ள தலைமை கணக்கு தணிக்கையாளர் அலுவலகம், பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மைய கணக்காளர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. சென்னையில் கடந்த 2 நாட்களில் சுமார் 10 இடங்களுக்கு குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.