மலையாள நடிகையும் அம்மாநில நடிகர் சங்கமான ‘அம்மா’வின் தலைவருமான ஸ்வேதா மேனன், தமிழில், நான் அவனில்லை 2, துணை முதல்வர், சிநேகிதியே, அரவான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர், திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் பணத்துக்காக ஆபாசமாக நடித்ததாகவும் அக்காட்சிகளை சமூக ஊடகங்கள், ஆபாச தளங்களில் வெளியிட்டு வருமானம் ஈட்டியதாகவும் சமூக ஆர்வலர் மார்ட்டின் மெனச்சேரி என்பவர், எர்ணாகுளம் நீதிமன்றத்தில் கடந்த மாதம் வழக்குத் தொடர்ந்தார்.
நீதிமன்ற உத்தரவுப்படி கொச்சி போலீஸார் ஸ்வேதா மீது வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் ஸ்வேதா மேனன் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நேற்று மீண்டும் வந்தது. அப்போது இந்த தடை உத்தரவை அக்.28-ம் தேதி வரை நீட்டித்து கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.