சிட்னி: ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் டி 20 தொடரில் சிட்னி தண்டர் அணியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான
ரவிச்சந்திரன் அஸ்வின் இணைய உள்ளார். இதன் மூலம் பிக் பாஷ் லீக்கில் விளையாடும் முதல் இந்தியர் என்ற பெருமையை அவர், பெற உள்ளார்.
39 வயதான அஸ்வின் கடந்த ஆண்டு டிசம்பரில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார். அதைத் தொடர்ந்து கடந்த மாதம் ஐபிஎல் தொடரிலும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்நிலையில் அஸ்வின் பிக் பாஷ் டி 20 தொடரில் சிட்னி தண்டர் அணியில் இணைய உள்ளதாக ஆஸ்திரேலியாவில் உள்ள ஃபாக்ஸ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பை சிட்னி தண்டர் அணி விரைவில் வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஐஎல்டி20 தொடருக்கான வீரர்கள் ஏலப்பட்டியலிலும் அஸ்வின் தனது பெயரை சேர்த்துள்ளார். இந்த தொடர் வரும் டிசம்பர் 2 முதல் ஜனவரி 4-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் அஸ்வின் அதன் பின்னர் பிக் பாஷ் டி 20 தொடரின் பிற்பகுதியில் சிட்னி தண்டர் அணியுடன் இணையக்கூடும் என தெரிகிறது.