மதுரை: மின் வாரியத்தில் மின்மாற்றிகள் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைக்கக் கோரிய மனு மீதான விசாரணை, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக மின் வாரியத்துக்கு கடந்த 2021, 2022, 2023-ம் ஆண்டுகளில் மின்மாற்றிகள் வாங்க முடிவு செய்யப்பட்டது.
இதற்கான டெண்டரில் பங்கேற்ற அனைவரும் முன்கூட்டியே முடிவு செய்து ஒரே தொகையை குறிப்பிட்டுள்ளனர். அனைத்து நிலை அதிகாரிகளும் இணைந்து டெண்டரில் பங்கேற்ற அனைவருக்கும் பணிகளை சமமாகப் பிரித்துக் கொடுத்துள்ளனர். இந்த டெண்டர்படி வெவ்வேறுதிறன் மிக்க 26,300 மின்மாற்றிகளை ரூ.1,068 கோடிக்கு வாங்கியிருக்க வேண்டும். அதிகாரிகள் தவறு காரணமாக சுமார் ரூ.350 கோடி அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது.
மின்மாற்றி கொள்முதல் செய்வதில் சாதாரண நிலை அதிகாரிகளால் முடிவெடுக்க முடியாது. மின்வாரிய உயர் அதிகாரிகளும், அப்போதைய மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியும் இணைந்து முடிவு செய்து மின்மாற்றிகள் வாங்கியுள்ளனர்.
எனவே, தமிழக மின் வாரியத்தில் மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்டதில் நடந்துள்ள முறைகேடு தொடர்பாக தமிழக மின்வாரியத் தலைவர், டெண்டர் கோரும் அதிகார அமைப்பு, டெண்டர் உறுதி செய்யும் குழு, அப்போதைய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகி யோரிடம் முறையாக விசாரிப்பதற் காக சிறப்பு விசாரணை குழுவை அமைக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், “இதுபோன்ற வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வில் விசாரணையில் உள்ளன. இந்த வழக்கையும் சென்னைக்கு மாற்ற வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.