புதுடெல்லி: தீபாவளி மற்றும் சாத் பண்டிகையமுன்னிட்டு அக்டோபர் 1 முதல் சுமார் 12,000 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதுகுறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: தீபாவளி மற்றும் சாத் பண்டிகை காலத்தில் ரயில்களில் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக சுமார் 12,000 சிறப்பு ரயில்களை ரயில்வே இயக்க உள்ளது. இதன் மூலம் கூடுதலாக 3 கோடி பேர் பயணம் செய்யலாம். இது, ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகையை விட அதிகமாகும்.
இந்த சிறப்பு ரயில்கள் அக்டோபர் 1 முதல் 45 நாட்களுக்கும் மேலாக இயக்கப்படும். இவை தவிர கடைசி நேர நெரிசலை தவிர்க்க முன்பதிவு தேவையில்லாத முற்றிலும் பொதுப் பெட்டிகளை கொண்ட 150 ரயில்கள் தயார் நிலையில் வைக்கப்படும்.
செப்டம்பர் 23-ம் தேதி செவ்வாய்க்கிழமை வரை 10,000 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப் பட்டுள்ளன. தேவையின் அடிப்படையில் படிப்படியாக கூடுதல் ரயில்கள் அறிவிக்கப்படும். 70 ரயில்வே கோட்டங்களில் 29-ல் 90 சதவீதத்திற்கு மேல் நேரம் தவறாமை எட்டப்பட்டுள்ளது. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் தயார் நிலையில் உள்ளது. இதன் மற்றொரு ரயில் அக்டோபர் 15-ம் தேதிக்குள் வந்து விடும். அதன் பிறகே வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் அறிமுகப்படுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
கூடுதலாக 1.5 கோடி பேர் பயணிக்கும் வகையில் கடந்த ஆண்டு பண்டிகை காலத்தில் 7,724 சிறப்பு ரயில்களை ரயில்வே இயக்கியது.