சென்னை: தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் வழங்கப்படும் கலைமாமணி விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விருது, பல ஆண்டுகளாக இயல், இசை, நாடகக் கலைக்கு சேவை செய்த கலைஞர்களின் பங்களிப்பைப் பாராட்டி வழங்கப்படுகிறது.
அதன்படி, கடந்த 2021, 2022, 2023 என மூன்று ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது, திரைத் துறையைப் பொறுத்தவரையில், நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, விக்ரம் பிரபு, மணிகண்டன், நடிகை சாய் பல்லவி, இயக்குநர் லிங்குசாமி, சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன், பாடகி ஸ்வேதா மோகன், பாடலாசிரியர் விவேகா உள்ளிட்டோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு விருது பிரிவில் பாடகர் கே.ஜே.யேசுதாஸுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது வழங்கப்படுகிறது.
மேலும், அடுத்த மாதம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு 3 சவரன் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் விருதுப் பட்டயம் வழங்கப்படும். திரைத் துறையில் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளோர் பட்டியல்:
2021-கான விருதுகள் பெறுவோர்:
> நடிகர் எஸ்.ஜே.சூர்யா
> நடிகை சாய் பல்லவி
> இயக்குநர் லிங்குசாமி
> திரைப்பட அரங்க அமைப்பாளர் ஜே.கே. என்ற எம்.ஜெயக்குமார்
> சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன்
> சின்னத்திரை நடிகர் பி.கே.கமலேஷ்
2022-க்கான விருதுகள் பெறுவோர்:
> நடிகர் விக்ரம் பிரபு
> நடிகை ஜெயா வி.சி.குகநாதன்
> பாடலாசிரியர் விவேகா
> திரைப்பட செய்தித் தொடர்பாளர் டைமண்ட் பாபு
> திரைப்பட புகைப்படக் கலைஞர் டி.லட்சுமிகாந்தன்
> சின்னத்திரை நடிகை ‘மெட்டி ஒலி’ காயத்ரி
2023-ம் ஆண்டுக்கான விருதுகள் பெறுவோர்:
> நடிகர் கே.மணிகண்டன்
> நடிகர் ஜார்ஜ் மரியான்
> இசையமைப்பாளர் அனிருத்
> நடன இயக்குநர் சாண்டி (எ) சந்தோஷ்குமார்
> பின்னணி பாடகி ஸ்வேதா மோகன்
> திரைப்பட செய்தித் தொடர்பாளர் நிகில் முருகன்