துபாய்: ஆசிய கோப்பை டி 20 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று இரவு 8 மணிக்கு துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – வங்கதேச அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் முதல் அணியாக இறுதிப் போட்டியில் கால்பதிக்கும்.
ஆசிய கோப்பை டி 20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது. இந்நிலையில் 2-வது ஆட்டத்தில் இந்திய அணி இன்று இரவு வங்கதேசத்துடன் மோதுகிறது. இரு அணிகளும் சர்வதேச டி 20-ல் 17 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் வங்கதேச அணி ஒரே ஒரு முறை மட்டும் வெற்றி கண்டிருந்தது.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கில் சிறிது தடுமாற்றம் கண்டிருந்தது. இந்த விஷயங்களில் இந்திய அணி கூடுதல் கவனம் செலுத்தக்கூடும். பேட்டிங்கில் அதிரடியாக விளையாடி 74 ரன்கள் விளாசிய அபிஷேக் சர்மா, 47 ரன்கள் சேர்த்த ஷுப்மன் கில் ஆகியோரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும்.
இதேபோன்று பந்து வீச்சில் திருப்பு முனையை ஏற்படுத்திக் கொடுத்த ஷிவம் துபேவும் மீண்டும் ஒருமுறை உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தக்கூடும். சுழலில் குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, அக்சர் படேல் கூட்டணி வங்கதேச அணியின் பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும். கடந்த ஆட்டத்தில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்திருந்த ஜஸ்பிரீத் பும்ரா பார்முக்கு திரும்புவதில் முனைப்பு காட்டக்கூடும்.
லிட்டன் தாஸ் தலைமையிலான வங்கதேச அணி தடுமாறியே சூப்பர் 4 சுற்றுக்கு நுழைந்திருந்தது. எனினும் அந்த அணி சூப்பர் 4 சுற்றில் தனது முதல் ஆட்டத்தில் இலங்கை அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. அந்த ஆட்டத்தில் 169 ரன்களை இலக்கை விரட்டிய வங்கதேச அணி ஒரு பந்து மீதம் இருக்கையில் வெற்றியை வசப்படுத்தியிருந்தது.
இது ஒருபுறம் இருக்க டி 20 கிரிக்கெட்டில் வங்கதேச அணி தொடர்ச்சியாக வலுவான செயல் திறனை வெளிப்படுத்தியது இல்லை. மேலும் அந்த அணியின் செயல் திறன் பலம் வாய்ந்த இந்தியாவுடன் ஒப்பிடக்கூடியதாக இருந்தது கிடையாது. இந்திய அணியின் திட்டங்கள் அனைத்தும் சரியாக அமைந்தால் மீண்டும் ஒரு பெரிய அளவிலான வெற்றியுடன் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதை உறுதி செய்யும்.
எனினும் டி 20 வடிவத்தின் நிலையற்ற தன்மையும், அந்த அணியின் வலுவான சுழற்பந்து வீச்சும் இந்திய அணிக்கு ஆச்சரியம் அளிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் இரண்டு அணிகளிலும் உள்ள பேட்ஸ்மேன்களின் தரத்தில் உள்ள இடைவெளி பெரிய வித்தியாசமாக இருக்கும். இந்திய அணியின் தொடக்க வீரரான அபிஷேக் சர்மா 210 ஸ்டிரைக் ரேட்டில் ரன் வேட்டையாடி வருகிறார். மற்றொரு தொடக்க வீரரான ஷுப்மன் கில்லின் ஸ்டிரைக் ரேட் 158 ஆக இருக்கிறது.
வங்கதேச அணியில் லிட்டன் தாஸின் ஸ்டிரைக் ரேட் 129 ஆகவும், தவூஹித் ஹிர்டோயின் ஸ்டிரைக் ரேட் 124 ஆகவும் உள்ளது. பந்து வீச்சை பொறுத்தவரையில் சுழலில் ரிஷாத் ஹோசைன், மெஹதி ஹசன் இந்திய பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கக்கூடும். வேகப்பந்து வீச்சில் தஸ்கின் அகமது, முஸ்டாபிஸூர் ரஹ்மான், தன்ஸிம் ஹசன் சாஹிப் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களாக உள்ளனர்.
‘இந்திய அணியை வீழ்த்தலாம்’ – வங்கதேச அணியின் தலைமை பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் கூறும்போது, “எந்த ஒரு அணிக்கும் இந்திய அணியை வீழ்த்தக் கூடிய திறன் இருக்கிறது. போட்டி நாளில் என்ன நடக்கிறது என்பதுதான் மிகவும் முக்கியம். இந்திய அணி கடந்த 4 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது என்பதெல்லாம் முக்கியமல்ல. போட்டி நடைபெறும் மூன்றரை மணி நேரத்தில் என்ன நடக்கிறது என்பதுதான் முக்கியம்.
நாங்கள் களத்தில் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம், இந்தியாவின் உத்தியில் ஏதேனும் பலவீனங்களைக் கண்டறிவோம். அப்படித்தான் எங்கள் வெற்றிகளைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். உலகின் சிறந்த டி20 அணியான இந்தியாவுக்கு எதிரான போட்டி என்றால், எப்போதும் அதிக அளவிலான எதிர்பார்ப்பு இருக்கும். இந்தியாவுக்கு எதிரான சவாலை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றார்.