சென்னை: அதிமுக எத்தனை கோஷ்டிகளாக இருந்தாலும், அனைத்தையும் பாஜகதான் வழிநடத்தும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறினார்.
இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: அதிமுகவின் ஒவ்வொரு கோஷ்டியைச் சேர்ந்தவர்களும் தனித்தனியாக டெல்லி சென்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வை சந்தித்து வருகின்றனர். பாஜகதான் அதிமுகவை வழி நடத்துக்கிறது என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு.
‘மோடியா – லேடியா’ என்று முழங்கிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அதிமுக, தற்போது அண்ணன் அமித் ஷா என்ன சொல்கிறாரோ அதன்படிதான் நடப்போம் என்ற பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அந்தவகையில், அதிமுக எத்தனை கோஷ்டிகளாகப் பிரிந்தாலும், அந்த அனைத்து கோஷ்டிகளையும் பாஜகதான் வழிநடத்தும். இதைத்தான் டெல்லி சந்திப்புகள் உறுதிப்படுத்துகின்றன. இவ்வாறு சண்முகம் தெரிவித்துள்ளார்.