வால்மீகி முனிவர் வேடத்தில், தான் நடிப்பதாக வெளியான வீடியோ போலியானது என்று நடிகர் அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார்.
பிரபல இந்தி நடிகர் அக்ஷய்குமார் நடித்துள்ள ‘ஜாலி எல்.எல்.பி’ படத்தின் 3-ம் பாகம், செப்.19-ம் தேதி வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் வால்மீகி முனிவரின் வாழ்க்கைக் கதை சினிமாவாக இருப்பதாகவும் வால்மீகியாக அக்ஷய் குமார் நடிக்க இருப்பதாகவும் வீடியோ ஒன்று வெளியானது. அதில் அக்ஷய் குமார் வால்மீகி வேடத்தில் இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றன. இதைக் கண்ட அவர் அதிர்ச்சியடைந்தார்.
இதுபற்றி வெளியிட்டுள்ள பதிவில், “வால்மீகி வேடத்தில் நான் நடிப்பதாக, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கொண்டு உருவாக்கிய வீடியோக்களை பார்த்தேன்.அவை போலியானவை. இதை ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இது உண்மையானதா, போலியா என்பதைச் சரிபார்க்காமல், சில சேனல்கள் செய்தியாக வெளியிடுவது மோசமானது. இன்றைய காலகட்டத்தில், ஏஐ மூலம் தவறான உள்ளடக்கம் உருவாக்கப்படும் நிலையில், ஊடக நிறுவனங்கள் சரிபார்த்த பின்னரே செய்திகளை வெளியிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.