சென்னை: மக்களின் அடிப்படை உரிமையான, நலவாழ்வு சேவைக்கான உரிமைச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நல அமைச்சரிடம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நேற்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கத்தை நடத்தி, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கையெழுத்துகளைப் பெற்று, அமைச்சரிடம் சமர்ப்பித்து, நலவாழ்வு சேவைக்கான உரிமைச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற கேட்டுக்கொண்டது.
இந்தச் சந்திப்பில் இயக்கத்தின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசு, பொதுச் செயலாளர் மொஹம்மது பாதுஷா, முன்னாள் பொதுச் செயலாளர் சுப்பிரமணி, ஆரோக்கிய உபகுழு பொறுப்பாளர் டாக்டர் அனுரத்னா, இணைப் பொறுப்பாளர் மாணிக்கதாய், பொருளாளர் சுதாகர், வட சென்னை மாவட்டச் செயலாளர் அரவிந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்தச் சட்டம், தமிழ்நாட்டில் அனைவருக்கும் குறைந்த செலவில் தரமான, வெளிப்படையான மருத்துவ சேவைகளை உறுதி செய்யும் முன்மாதிரி முயற்சியாக இருக்கும் என இயக்கம் தெரிவித்தது. இதுகுறித்து துறை அதிகாரிகளுடன் இணைந்து ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து இந்த சட்டத்தை நிறைவேற்ற கலந்து ஆலோசிப்பதாக அமைச்சர் அவர்களிடம் கூறியுள்ளார்.