சென்னை: மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதாவின் மனைவி கீதா ராதா சென்னையில் நேற்று முன்தினம் காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதாவின் மனைவியும், நடிகை கள் ராதிகா சரத்குமார், நிரோஷா ராம்கி ஆகியோரின் தாயாருமான கீதா ராதா (86), வயது மூப்பின் காரணமாக நேற்று முன்தினம் மாலை சென்னையில் காலமானார். அவரது உடல் சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுடன் சென்று கீதா ராதாவின் உடலுக்கு நேற்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து நடிகைகள் ராதிகா, நிரோஷா, நடிகர்கள் ராதாரவி, சரத்குமார் ஆகியோருக்கு ஆறுதல் கூறினார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வி.கே.சசிகலா, முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசர், நடிகர்கள் பிரபு, நாசர், நிழல்கள் ரவி, செந்தில், நடிகைகள் மீனா, ரேகா, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோரும் கீதா ராதா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அவரது உடல், பெசன்ட் நகர் மின்மயானத்தில் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது. கீதா ராதா மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.