சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 14ம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, “தமிழ்நாடு சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தொடர், அக்டோபர் 14ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்கும். அதைத் தொடர்ந்து, 2025-26 ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் சட்டமன்றத்தில் அளிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.
சட்டப்பேரவை கூடுவதற்கு முன்னதாக அலுவல் ஆய்வுக்குழு கூட்டப்பட்டு, கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது முடிவு செய்யப்படும். கூட்டத்தொடரின் முதல் நாளில், மறைந்த வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் அமுல் கந்தசாமி உட்பட 8 பேரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும்” என்றார்.
இந்தியாவிலேயே அரசியல் செய்யக்கூடிய ஒரே சபாநாயகர் அப்பாவு என அண்ணாமலை கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “அரசியலில் போட்டியிட்டு வெற்றிபெற்று தானே சபாநாயகராக ஆகியிருக்கோம்” என அவர் தெரிவித்தார்.