புதுடெல்லி: அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கின் மறு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றம், இந்த மேல்முறையீட்டு வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கடந்த 2006-11 திமுக ஆட்சியில் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தார்.
அப்போது, 2007-09 காலகட்டத்தில் வருமானத்துக்குஅதிகமாக ரூ.1.40 கோடி அளவுக்கு சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக துரைமுருகன், அவரது மனைவி சாந்தகுமாரி மீது வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கடந்த 2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் இருந்து இருவரையும் விடுவித்து வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த 2017-ம் ஆண்டு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், ‘‘அமைச்சர் துரைமுருகன், அவரது மனைவி சாந்தகுமாரியை விடுவித்து வேலூர் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இந்த வழக்கை தினந்தோறும் என்ற அடிப்படையில் மீண்டும் மறுவிசாரணை நடத்தி 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்’’ என்று கடந்த ஏப்ரலில் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். நீதிபதிகள் தீபாங்கர் தத்தா, அகஸ்டின் ஜார்ஜ் மாஸி அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹ்தகி, பி.வில்சன் ஆகியோர் வாதிட்டதாவது: கடந்த 33 ஆண்டுகளாக தனியாக வணிகம் செய்து வரும் சாந்தகுமாரி, ஆண்டுதோறும் முறையாக வருமான வரி செலுத்தி வருகிறார். இந்த நிலையில், இருவரது வருமானத்தையும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஒன்றாக கணக்கிட்டு, சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
இது ஏற்புடையது அல்ல. இது அரசியல் உள்நோக்கம் கொண்டது. மேலும், அமைச்சர் என்ற முறையில் துரைமுருகன் மீது வழக்கு பதிவு செய்யவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் ஆளுநரிடம்தான் அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால், சட்டப்பேரவை தலைவரிடம் அனுமதி பெற்றுள்ளனர்.
இதை எல்லாம் கருத்தில் கொண்டுதான் வழக்கில் இருந்து இருவரையும் வேலூர் சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது. உயர் நீதிமன்றம் அந்த தீர்ப்பை ரத்து செய்து, மறுவிசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. எனவே, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு வாதிட்டனர். இதையடுத்து, துரைமுருகன், சாந்தகுமாரிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கின் மறுவிசாரணைக்கு நீதிபதிகள் இடைக்காலத் தடை விதித்தனர். தமிழக அரசு பதில் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.