கவுஹாத்தி: மறைந்த பாடகர் ஜுபின் கார்க் இறுதி சடங்கு நாளை அசாம் மாநிலத்தில் நடைபெறுகிறது. அவரது நினைவாக இரண்டு இடங்களில் அசாம் அரசு நினைவிடம் அமைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கவுஹாத்தி நகரில் உள்ள அர்ஜுன் போகேஸ்வர் பருவா விளையாட்டு மைய கட்டிட வளாகத்தில் அவரது உடல் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரது உடல் செவ்வாய்க்கிழமை அன்று காலை 7.30 மணி அளவில் ஆம்புலன்ஸ் மூலம் இறுதி சடங்குக்கு கொண்டு செல்லப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அசாம் மாநிலத்தின் சோனாப்பூர் வருவாய் வட்டத்தில் உள்ள காமர்குசி என்சி கிராமத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது. அந்த இடத்தில் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பார்வையிட்டார். மேலும், இறுதி சடங்குகளுக்கு முன்னதாக ஜுபின் கார்க் உடலை இரண்டாவது முறையாக உடற்கூறு ஆய்வு செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார். மக்களின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு என அவர் தெரிவித்தார்.
நாளைய தினம் பள்ளி, கல்லூரி மற்றும் காமரூப் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது அசாம் அரசு. “சுமார் 6 ஏக்கர் நிலம் அரசு தரப்பில் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அவருக்கு நினைவிடம் அமைக்க இது சரியான இடமாக இருக்கும் என நாங்கள் கருதுகிறோம். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அவரது குடும்பத்தினரும் இதை ஏற்றுக் கொண்டனர். மக்களின் அன்பை பெற்றவர். அதனால்தான் அவருக்கு தேசம் முழுவதிலிருந்தும் மக்கள் அஞ்சலி செலுத்த திரண்டுள்ளனர்” என அம்மாநில அமைச்சர் அதுல் போரா தெரிவித்துள்ளார்.
ஜுபின் கார்க் இறுதி ஊர்வலத்தில் தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை என அசாம் அரசு தெரிவித்துள்ளது. ஆம்புலன்ஸில் அவரது உடல் உடன் அவரின் மனைவி இருப்பார். அவரது உறவினர்கள் பேருந்து மூலம் தகனம் செய்யப்பட உள்ள இடத்துக்கு அழைத்து வரப்படுவார்கள். இதில் மத்திய அரசு தரப்பில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பங்கேற்கிறார்.
அவரது உடலை நெடுஞ்சாலையில் இருந்து தகன மேடைக்கு அசாம் மாநில போலீஸார் சுமந்து வருவார்கள். பின்னர் அரசு மரியாதை அவரது உடலுக்கு அளிக்கப்படும். அதன் பின்னர் இறுதி சடங்கு நடைபெறும் என அசாம் அரசு தரப்பு கூறியுள்ளது. அவரது உடல் கொண்டு வரப்பட உள்ள தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அண்டை மாநிலமான மேகாலயாவில் உள்ள மதுபான கடைகள் நாளைய தினம் அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜுபின் கார்க்: அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரபல பாடகர் ஜுபின் கார்க் (வயது 52). இவர் அசாம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட பல்வேறு மொழிகளில் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார். தமிழில், ‘குத்து’ படத்தில் வரும், ‘அசானா அசானா’, ‘உற்சாகம்’ படத்தில், ‘கண்கள் என் கண்களோ’ உள்பட சில பாடல்களை பாடியுள்ளார்.
இவர், சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்த ‘வடகிழக்கு விழா’வுக்காக இசை நிகழ்ச்சி நடத்த சென்றிருந்தார். அப்போது பல்வேறு சாகச நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். ஆழ்கடலில் நடத்தப்படும் ஸ்கூபா டைவிங் சாகசத்திலும் ஈடுபட்டார். அப்போது ஜுபின் கார்க்குக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
ஜுபின் கார்க்கின் திடீர் மறைவு அசாம் மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் மறைவுக்கு அசாம் மாநில அரசு, 3 நாள் துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது.