லண்டன்: சர்வதேச அளவில் திறமையான நபர்களை ஈர்க்கும் நோக்கில், அவர்களுக்கான விசா கட்டணத்தை ரத்து செய்ய இங்கிலாந்து அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில் தற்காலிகமாக தங்கி பணிபுரிபவர்களுக்கு H1B விசா வழங்கப்படுகிறது. இதற்கான கட்டணத்தை ரூ.1.32 லட்சத்தில் இருந்து திடீரென ரூ.88 லட்சமாக அமெரிக்க அரசு உயர்த்தியது. இந்த புதிய கட்டண முறை நேற்று (செப்.21) முதல் அமலுக்கு வந்தது. இதனால், புதிதாக H1B விசா விண்ணப்பிப்போருக்கு சிக்கல் எழுந்துள்ளது. இதுவரை இந்த விசாவை வைத்திருப்பவர்களில் சுமார் 71 சதவீதம் பேர் இந்தியர்கள். அந்த வகையில், இந்த கட்டண உயர்வு அமெரிக்காவில் புணிபுரிய விரும்பும் திறமையான இந்தியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், அத்தகைய திறமையாளர்களை தன் பக்கம் ஈர்க்க இங்கிலாந்து வியூகம் வகுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இங்கிலாந்தின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் முயற்சியாக, உலகின் சிறந்த விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், டிஜிட்டல் நிபுணர்களை ஈர்க்கும் நோக்கில் திட்டங்களை வகுக்க இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆலோசித்து வருவதாக ஃபினான்சியல் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்டார்மரின் உலகலாவிய திறமை பணிக்குழு (global talent task force) இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அது கூறியுள்ளது.
“உலகின் முதல் ஐந்து பல்கலைக்கழகங்களில் படித்தவர்கள், மதிப்புமிக்க பரிசுகளைப் பெற்றவர்கள் போன்றோருக்கான விசா கட்டணத்தை முழுவதுமாக ரத்து செய்யும் யோசனை பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்க அதிபரின் H1B விசா கட்டண உயர்வு அறிவிப்புக்கு முன்பு இருந்தே இந்த யோசனை பரிசீலனையில் உள்ளது. எனினும், அமெரிக்க அதிபரின் கட்டண உயர்வு அறிவிப்பு, இங்கிலாந்தின் திட்டத்துக்கு சாதகமாக அமைந்துள்ளது.” என இது தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டுள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக ஃபினான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. உலகலாவிய திறமை மிகு நபர்களுக்கான விசா கட்டணம் இங்கிலாந்தில் தற்போது ரூ.90,000 என்ற அளவில் உள்ளது.
அமெரிக்க அதிபரின் உத்தரவால் இந்தியர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறப்படும் அதேநேரத்தில், சர்வதேச திறன்மிகு இந்தியர்கள் இனி தங்கள் திறமையை சொந்த நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த முடியும் என்பதால் இது நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. “எச்1பி விசா கட்டண உயர்வு சார்ந்த ட்ரம்ப்பின் அறிவிப்பு நிச்சயம் அமெரிக்காவுக்கு பின்னடைவாக அமையும். முக்கியத் துறைகளில் திறன் படைத்தவர்களை இந்த விசா கட்டணம் அமெரிக்காவில் நுழைவதை தடுக்கும். அதோடு, இந்தியாவில் முக்கிய நகரங்களில் ஆய்வகங்கள், ஸ்டார்ட்-அப்கள், படைப்பாற்றல் திறன்களை மடைமாற்றும் வாய்ப்பு கூடும்.
இந்தியாவின் சிறந்த மருத்துவர்கள், பொறியாளர்கள், விஞ்ஞானிகள் முதலானோர் நாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்றும் வாய்ப்பாகவும் இது அமையும். பல நிறுவனங்கள் தங்கள் இயக்கத்தை இந்தியாவில் விரிவுபடுத்தக் கூடும். அமெரிக்காவின் இழப்பு, இந்தியாவுக்கு ஆதாயம் கொடுக்கும்” என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
சோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தனது சமூக வலைதள பக்கத்தில், “பிரிவினையின் போது தங்கள் குடும்பங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இந்தியாவுக்கு எப்படி வரநேர்ந்தது என்பது குறித்து சிந்தி நண்பர்களிடம் ஏராளமான கதைகளை கேட்டிருக்கிறேன். இந்தியாவில் அவர்கள் தங்கள் வாழ்க்கையை கட்டியெழுப்பி சிறப்புடன் உள்ளனர்.
அதேபோன்று, விசாவுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவில் உள்ள இந்திய தொழில் வல்லுநர்கள் தங்கள் தாய்நாட்டுக்கு திரும்புவதை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். பிரிவினைக்குப் பிறகு இந்தியாவில் செழித்து வளர்ந்துள்ள சிந்தி சமூகத்தினரைப் போல அவர்களும் தங்களது சொந்த நாட்டில் வாழ்க்கையை கட்டியெழுப்ப இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.
அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பும் இந்தியர்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப 5 ஆண்டுகள் ஆகலாம். ஆனால். அது உங்களை வலிமையாக்கும். பயத்தில் வாழாதீர்கள். துணிச்சலான நடவடிக்கை மேற்கொள்ளுங்கள். நீங்கள் நன்றாக செய்வீர்கள்.” என்று தெரிவித்துள்ளார்.