புதுடெல்லி: இந்தியாவின் ஆன்லைன் வீட்டு சேவைகள் சந்தை வரும் 2030-ம் நிதியாண்டுக்குள் ரூ.8,800 கோடியாக அதிகரிக்கும் என்று ரெட்ஸீர் ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வசதிவாய்ப்பு, நம்பகத்தன்மை, வேகம் ஆகியவற்றுக்கான தேவை நகர்ப்புறங்களில் வேகமாக அதிகரித்து வருகிறது. அதன் பயனாக, இந்தியாவின் ஆன்லைன் வீட்டு சேவைகள் சந்தையின் வருடாந்திர வளர்ச்சி விகிதம் 18-22 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் கணக்கிடுகையில், இந்த சந்தை வரும் 2029-30-ம் நிதியாண்டுக்குள் ரூ.8,500 கோடி ரூ.8,800 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குயிக் காமர்ஸ் எனப்படும் விரைவு வர்த்தகம் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து ” இன்ஸ்டா ஹோம் சர்வீசஸ்” இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் அடுத்த எல்லையாக உருவாகி வருகிறது.
இந்தியாவின் ஒட்டுமொத்த வீட்டு சேவைகள் சந்தை 2025 நிதியாண்டில் ரூ.5,100 கோடி-ரூ.5,210 கோடியாக இருந்தது. இந்தியாவின் வீட்டு சேவைத் துறை தொடர்ந்து பெரும்பாலும் ஒழுங்கமைக்கப்படாததாகவும், ஆப்லைனில் மட்டும்தான் உள்ளது. 2025 நிலவரப்படி இந்த சந்தையில் ஆன்லைன் ஊடுருவல் என்பது நிகர பரிவர்த்தனையில் 1 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது.
இது, இந்த துறையில் பாரம்பரிய, முறைசாரா சேவை நெட்வொர்க்குகள் இன்னும் எவ்வளவு ஆழமாக வேரூன்றி உள்ளன என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. தற்போது, இந்தியாவின் எட்டு பெரிய நகரங்கள் ஆன்லைன் வீட்டு சேவைகளில் 85-90 சதவீதத்தைக் கொண்டுள்ளன. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.