திண்டுக்கல்: சுதந்திரத்திற்கு பிறகு அதிகரித்த வரியை குறைந்த அரசு பிரதமர் மோடியின் அரசு தான், என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். .
மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களுக்குட்பட்ட 21 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான பாரதிய ஜனதா கட்சியின் பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டம் திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் தலைமை வகித்தார். மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் தலைமை வகித்தார்.
மாநிலச் செயலாளர் கதலி நரசிங்கப் பெருமாள் முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் ராமசீனிவாசன், தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ., பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை, தேசிய செயற்குழு உறுப்பினர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தேசிய பொறுப்பாளர் அரவிந்த் மேனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாஜக கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் திண்டுக்கல்லில் மூன்று மாவட்டங்களுக்கான பூத் கமிட்டி மாநாடு நடைபெறுகிறது. இன்று முதல் ஜிஎஸ்டி வரி குறைப்பு பற்றி பிரதமர் நரேந்திரமோடி பேசியுள்ளார். இதனால் ஒரு வீட்டில் ஒரு பொருள் வாங்க வேண்டும் என்றால் தற்போது இரண்டு பொருளாக வாங்கலாம். கட்டிடப் பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. குறைக்காவிட்டால் நடவடிக்கை உண்டு. டூத்பிரஸ், சோப் உள்ளிட்ட மக்கள் அன்றாடப் பயன்பாட்டு பொருட்களின் வரி குறைக்கப்பட்டுள்ளது. வரி குறைப்பால் மக்களிடம் வாங்கக் கூடிய தன்மை அதிகரிக்கும். வாங்கும்போது உற்பத்தி கூடும். உற்பத்தி கூடினால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். நவராத்திரி முதல் நாளில் ஜிஎஸ்டி வரி குறைப்பை பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் ஆகியோர் அமல்படுத்தியுள்ளனர்.
மற்ற தலைவர்கள் தீபாவளிக்கு வாழ்த்து கூற மாட்டார்கள். மற்ற நிகழ்வுக்கு வாழ்த்துக்கள் கூறுவார்கள். பிரதமர் தீபாவளிக்கு வாழ்த்து சொல்லும் போது தீபாவளிக்கு எல்லா மக்களும் எல்லா பொருளும் வாங்க வேண்டும், சந்தோஷமாக இருக்க வேண்டும் என ஜிஎஸ்டி வரி குறைப்பை கொண்டு வந்துள்ளார்.
இந்தியாவில் சுதந்திரம் கிடைத்த பிறகு இதுவரை அதிகரித்த வரியை குறைத்த அரசு பிரதமர் நரேந்திர மோடியின் அரசு மட்டுமே. எந்த அரசாங்கமும் இதுவரை வரியை குறைந்ததில்லை, என்றார்.