நடிகர் சாந்தனு பாக்யராஜ், ஷேன் நிகாமுடன் இணைந்து நடித்துள்ள மலையாளப் படம் ‘பல்டி’.
விளையாட்டுப் பின்னணி கொண்ட ஆக்ஷன் த்ரில்லர் படமான இதை அறிமுக இயக்குநர் உன்னி சிவலிங்கம் எழுதி இயக்கியுள்ளார். ப்ரீத்தி அஸ்ராணி நாயகியாக நடித்துள்ளார். எஸ்டிகே ஃபிரேம்ஸ் மற்றும் பினு ஜார்ஜ் அலெக்ஸாண்டர் புரொடக்ஷன்ஸ் சார்பில் சந்தோஷ் டி.குருவில்லா, பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் தயாரித்துள்ளனர். இதன் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
நடிகர் சாந்தனு பேசும்போது, “15 வருடங்களுக்குப் பிறகு மலையாள சினிமாவில் இப்போது மீண்டும் இணைந்துள்ளேன். ‘பல்டி’ 4 இளைஞர்களைக் கொண்ட கதை. ஷேனுக்கு சமமாக மலையாளத்திலோ, தமிழில் மற்றவர்களையோ கூட தேர்வு செய்திருக்கலாம். ஆனால், இப்படிப்பட்ட கதையில் எனக்கு அற்புதமான கதாபாத்திரம் கொடுத்ததற்கு நன்றி.
இப்படம் மலையாளத்தில் எனக்கு ரீ என்ட்ரியாக இருக்கும். கபடி குழுவில் ஒருவர் காணாமல் போய்விட்டால் என்ன நடக்கும் என்பதுதான் கதை. 3 மாதங்கள் கபடி பயிற்சி எடுத்து நடித்தோம். ஷேனிடம் நிறைய கற்றுக் கொண்டேன். மலையாளத்தில் நான் தான் டப்பிங் பேசினேன். 3 நாட்களில் பேசி முடித்தேன்” என்றார்.