போபால்: மத்தியபிரதேசத்தில் பன்னா வைரச் சுரங்கம் மிகவும் பிரபலமானது. தரமான வைரங்கள் கொண்ட உலகின் இரண்டாவது பெரிய சுரங்கம் இதுவாகும்.
இங்கு 8 மீட்டர் சுரங்க நிலம் ஆண்டுக்கு ரூ.200-க்கு ஏலம் விடப்படுகிறது. வைரம் தோண்டி எடுத்த பிறகு அதை பன்னா வைர அலுவலகத்தில் டெபாசிட் செய்ய வேண்டும். இங்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை வைர ஏலம் நடைபெறும். இதில் நாடு முழுவதிலும் இருந்து வைர வியாபாரிகள் பங்கேற்கின்றனர். ஏலத்தொகையில் 11% ராயல்டி, 1% டிடிஎஸ் என மொத்தம் 12% கழிக்கப்பட்டு எஞ்சிய தொகை அதை கண்டெடுத்தவருக்கு தரப்படும்.
இந்நிலையில் இங்குள்ள ஒரு சுரங்கத்தில் தோண்டும்போது, ரச்னா கோல்டர் என்ற பெண் தொழிலாளி 8 வைரங்களை கண்டெடுத்துள்ளார். இவற்றில் மிகப்பெரிய வைரம் 0.79 காரட் எடை கொண்டதாகும். இதுகுறித்து வைர நிபுணர் அனுபம் சிங் கூறுகையில், “ரச்னா கண்டுபிடித்த 8 வைரங்களில் 6 வைரங்கள் அதிக தரம் கொண்டதாகும். இதில் 2 கற்கள் நிறமற்றவை. இந்த வைரங்களை மாவட்ட வைர அலுவலகத்தில் ரச்னா டெபாசிட் செய்துள்ளார். அங்கு அந்த வைரங்கள் பல லட்ச ரூபாய்க்கு ஏலம் செல்ல வாய்ப்புள்ளது” என்றார். 3 குழந்தைகளுக்கு தாயான ரச்னா, ஏல விற்பனை மூலம் கிடைக்கும் தொகையால் தனது குடும்ப பொருளாதாரம் மேம்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.