தனுஷ் படத்தை இயக்க இருப்பதை உறுதி செய்திருக்கிறார் ‘லப்பர் பந்து’ இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து.
தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘லப்பர் பந்து’. இதில் தினேஷ், ஹரிஷ் கல்யாண், காளி வெங்கட், ஸ்வாசிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இன்று அப்படம் வெளியாகி ஓராண்டு ஆகிறது. இதனை முன்னிட்டு தனது அடுத்த படத்தினை அறிவித்துள்ளார் தமிழரசன்.
அடுத்த படத்தில் தனுஷை இயக்க இருப்பதை உறுதி செய்திருக்கிறார். முன்னதாக, அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார் என்பது செய்தியாக வெளியானாலும், உறுதிப்படுத்தப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
’லப்பர் பந்து’ ஓராண்டு ஆனது குறித்தும், தனுஷ் படம் குறித்து தமிழரசன் பச்சமுத்து வெளியிட்டுள்ள பதிவில், “நம்மளால சினிமாவுக்கு போக முடியுமா? போனா உதவி இயக்குநர் ஆக முடியுமா? உதவி இயக்குநர் ஆனாலும் நம்மளால கத பண்ண முடியுமா? பண்ண கதைய நடிகர்கள் கிட்ட சொல்லி ஒகே பண்ண முடியுமா? நடிகர்கள் ஓகே பண்ண கதைய சரியா படமா எடுக்க முடியுமா? எடுத்த படத்த என்னையும் எடிட்டரையும் தவிர மத்தவங்களால முழுசா பார்க்க முடியுமா? இப்டி இன்னும் வெளிய சொல்ல முடியாத நிறைய இன்செக்யூரிட்டீஸ் மற்றும் முடியுமாக்களோட மொத்த உருவமா நான் இருந்தபோதுதான் போன வருஷம் இதே செப்டம்பர் 20 ’லப்பர் பந்து’ ரிலீஸ் ஆச்சு!
முதல் காட்சி முடிஞ்ச இந்த நாள் தான் என்னோட எல்லா கேள்விகளுக்கும் நீங்க ஒரே பதிலா சொன்னீங்க. இங்க முடியாதுன்னு ஒன்னும் இல்ல,எல்லாமே எல்லோரலையும் முடியும்.. மூடிட்டு போய் அடுத்த பட வேலைய பாருன்னு. ரொம்ப நன்றி நீங்க குடுத்த அன்புக்கும் மரியாதைக்கும். இப்டி என்னை மோட்டிவேட் பண்ண இந்த நாளுல ஊருக்கே தெரிஞ்ச அந்த அப்டேட்டை நானும் சொன்னாதான் உங்களுக்கும் அந்த நாளுக்கும் நான் பண்ற நன்றியா இருக்கும்!
ஆமாங்க, என்னோட அடுத்த படம் தனுஷ் சார் கூட தான் பண்றேன். தனுஷ் சார் ரொம்ப நன்றி கதை சொல்லும்போது என் பதற்றத்த பொறுத்துக்கிட்டதுக்கு. நடிப்பு அசுரனுக்கு ஆக்ஷன், கட் சொல்ல காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் தமிழரசன் பச்சமுத்து.