சென்னை: சென்னைக்கு செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கூடுதலாக நாளொன்றுக்கு 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கூடவே, குடிநீர் தொடர்பான பொதுமக்களின் குறைகள் மற்றும் புகார்களை விரைவாக நிவர்த்தி செய்ய “சென்னை குடிநீர் செயலி” என்ற புதிய செல்போன் செயலியினை மக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். இச்செயலியை சென்னை குடிநீர் வாரியம் வடிவமைத்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து, நாளொன்றுக்கு கூடுதலாக 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் தேவைக்கு ஏற்பவும், பெருகிவரும் சென்னை மாநகரின் மக்கள் தொகையை கருத்தில் கொண்டும், ஏரியின் நீர் இருப்பை கருத்தில் கொண்டும், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து ஏற்கனவே தினசரி வழங்கி வந்த 265 மில்லியன் லிட்டர் குடிநீருடன், கூடுதலாக இத்திட்டத்தின் மூலம் 265 மில்லியன் லிட்டர் குடிநீர் தினசரி வழங்குவதால் நாளொன்றுக்கு 530 மில்லியன் லிட்டர்
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கப்படும். இதன்மூலம் அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் வளசரவாக்கம், ஆலந்தூர், அடையார் மண்டலங்கள், தாம்பரம் மாநகராட்சி, குன்றத்தூர் மற்றும் திருபெரும்புதூர் நகராட்சிகளில் உள்ள 20 இலட்சம் பொது மக்கள் பயன் பெறுவர்.
மேலும், பொதுமக்களின் குறைகளை விரைவாக நிவர்த்தி செய்ய அனைத்து துறைகளிலும் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், சென்னை குடிநீர் வாரியம், பொதுமக்களின் குறைகள் மற்றும் புகார்களை விரைவாக நிவர்த்தி செய்ய “சென்னை குடிநீர் செயலி” என்ற புதிய செல்போன் செயலியினை வடிவமைத்து மக்களின் பயன்பாட்டிற்காக தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.
“சென்னை குடிநீர் செயலி” புகைப்படங்களுடன் கூடிய பதிவு செய்யும் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயலி மூலம், பொதுமக்களால் பதிவு செய்யப்படும் புகார்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்ட புவியியல் தகவல் அமைப்பின் (GIS) மூலம் தானாகவே கணினி வழியாகப் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட உதவி பொறியாளருக்கு குறுஞ்செய்தி மற்றும் வாட்ஸ்அப் வாயிலாக அனுப்பப்படும்.
மேலும், புகார் பதிவு செய்த நபருக்கு உடனடியாக உறுதிப்படுத்தல் குறுஞ்செய்தியும் அனுப்பப்படும். இச்செயலியின் முக்கிய சிறப்பம்சமாக புகாரின் நிலை குறித்து பொதுமக்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
மேலும், புகார்களை இணையதளம், மின்னஞ்சல், 8144930308 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் பேஸ்புக், எக்ஸ் தளம் போன்ற சமூக வலைதளங்கள் மற்றும் கியூஆர் கோடு மூலமும் பதிவு செய்யலாம். பொதுமக்களின் வசதிக்காக இச்செயலி தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சென்னை குடிநீர் செயலியினை, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ மொபைல் சாதனங்களில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இப்புகார்கள் அனைத்தும் சென்னை குடிநீர் செயலியில் ஒருங்கிணைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த நிகழ்ச்சியில், தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ. கிருஷ்ணசாமி, துரை சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்