புதுடெல்லி: ஜெய்ஸ் -இ-முகமது கமாண்டர் இலியாஸ் காஷ்மீரி ஒப்புதலை தொடர்ந்து, முரித்கே பகுதியில் இருந்த ‘மர்காஷ்-இ-தொய்பா’ முகாம் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் தரைமட்டமானதாக லஷ்கர் கமாண்டர் குவாசிம் தற்போது கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி அன்று, லஷ்கர் பிரிவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் 9 முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. ஆனால், இதை பாகிஸ்தான் மறுத்து வந்தது.
மசூத் குடும்பத்தினர் மரணம்: இந்நிலையில் ஜெய்ஸ்-இ- முகமது அமைப்பின் கமாண்டர் இலியாஸ் காஷ்மீரி சமீபத்தில் அளித்த வீடியோ பேட்டியில், “இந்திய தாக்குதலில் ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பின் பஹவல்பூர் முகாம் தகர்க்கப்பட்டதாகவும், இந்த தாக்குதலில் தங்கள் அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தினர் சிதைக்கப்பட்டனர்” என கூறியிருந்தார்.
இதையடுத்து சமூக ஊடகத்தில் தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் லஷ்கர் அமைப்பின் கமாண்டர் குவாசிம் பேசுகிறார். அதில் அவர், “பாகிஸ்தானின் முரித்கே பகுதியில் தரைமட்டமாகி கிடக்கும் மர்காஷ்-இ-தொய்பா முகாம் முன் நின்று பேசுகிறேன்.
இந்த இடத்தில்தான் மிகப் பெரிய முஜாகிதீன்கள் (தீவிரவாதிகள்) பயிற்சி பெற்றனர். இந்த முகாமை நாங்கள் இன்னும் பெரிதாக கட்டவுள்ளோம். ஜிகாதிகளாக மாற விரும்பும் இளைஞர்கள் இந்த முகாமில் நடைபெறும் ஆயுத பயிற்சி மற்றும் மத போதனைகளில் கலந்து கொள்ள வேண்டும்” என்கிறார்.
வெள்ள நிவாரணம் என்ற பெயரில் மர்காஷ்-இ-தொய்பா முகாமை மீண்டும் கட்ட நிதி திரட்டும் பிரச்சாரத்தில், மும்பை தாக்குதலுக்கு காரணமான ஹபீஸ் சயீத் தலைமையிலான குழு இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதிதான் லஷ்கர் கமாண்டர் குவாசிம் வெளியிட்டுள்ள வீடியோ.
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிப்பு செய்தியை பாகிஸ்தான் மறுத்து வந்த நிலையில், தீவிரவாத அமைப்பின் கமாண்டர்களே ஆதாரத்துடன் வீடியோ வெளியிட்டு தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதை
ஒப்புக் கொண்டுள்ளனர்.