அபுதாபி: ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் ‘ஏ’ பிரிவில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா – ஓமன் அணிகள் மோதின.
இந்திய அணியில் ஜஸ்பிரீத் பும்ரா, வருண் சக்ரவர்த்தி ஆகியோருக்கு பதிலாக ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 188 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 45 பந்துகளில், 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 56 ரன்கள் விளாசினார். அவர், 41 பந்துகளில் அரை சதம் கடந்திருந்தார். சர்வதேச டி20 அரங்கில் சஞ்சு சாம்சனுக்கு இது 3-வது அரைசதமாக அமைந்தது.
முன்னதாக ஷுப்மன் கில் 5 ரன்களில் ஷா ஃபைசல் பந்தில் போல்டானார். அபிஷேக் சர்மா 15 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்த நிலையில் ராமானந்தி பந்தில் வெளியேறினார். ஹர்திக் பாண்டியா ஒரு ரன் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார்.
அக்சர் படேல் 13 பந்துகளில் 26 ரன்களும், திலக் வர்மா 18 பந்துகளில் 29 ரன்களும், ஷிவம்துபே 5 ரன்களும், அர்ஷ்தீப் சிங் ஒரு ரன்னும் சேர்த்து ஆட்டமிழந்தனர். ஹர்ஷித் ராணா 13 ரன்களும், குல்தீப் யாதவ் ஒரு ரன்னும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து 189 ரன்கள் இலக்குடன் ஓமன் அணி பேட் செய்தது.
அந்த அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. ஆமீர் கலீம் 64 ரன்கள், ஹம்மாத் மிர்சா 51 ரன்களும் எடுத்தனர். அந்த அணியின் கேப்டன் ஜதீந்தர் சிங் 32 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருதை சஞ்சு சாம்சன் பெற்றார்.