ஊட்டி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை அக்டோபர் 10-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் 2017-ல் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டு, பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன.
இது தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி எம்.செந்தில்குமார் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. குற்றம் சாட்டப்பட்டோர் யாரும் ஆஜராகாத நிலையில், அரசு வழக்கறிஞர்கள் ஷாஜகான், கனகராஜ் மற்றும் சிபிசிஐடி போலீஸார் மட்டும் ஆஜராகினர். இதையடுத்து, வழக்கு விசாரணையை அக். 10-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.