தமிழகம் முழுவதும் திமுக மேயர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக டூரடித்து விசாரணை நடத்தும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, தேவைப்பட்டால் அவர்களிடம் ராஜினாமா கடிதங்களையும் எழுதி வாங்கி வருகிறார். ஆனால், அவரது சொந்த ஊரான திருச்சியில் திமுக மேயருக்கு எதிராக திமுக கவுன்சிலர்களே ஒத்துழையாமை இயக்கம் நடத்தி வருவதை கண்டுகொள்ளத்தான் ஆளில்லை.
திருச்சி மாநகராட்சியில் மொத்தம் உள்ள 65 வார்டுகளில் 50 வார்டுகளை தன்வசம் வைத்திருக்கிறது திமுக. பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு மூன்று கவுன்சிலர்கள் மட்டுமே இருப்பதால் இங்கு எதிர்க்கட்சி வரிசையிலிருந்து எதிர்ப்புக் குரல்கள் அவ்வளவாய் வருவதில்லை. அதையும் சேர்த்து ஆளும் கட்சி கவுன்சிலர்களே செய்து கொண்டிருப்பதால் விளையாட்டு மைதானம் போல் ஆகிக் கொண்டிருக்கிறது மாநகராட்சி.
திருச்சி மேயராக அமைச்சர் நேருவின் விசுவாசியான மு.அன்பழகனும், துணை மேயராக அமைச்சர் அன்பில் மகேஸின் விசுவாசியான ஜி.திவ்யாவும் இருக்கிறார்கள். இவர்களுக்கு ஆதரவாக தலா 25 திமுக கவுன்சிலர்கள் இருக்கிறார்கள். இதில் பெரும்பாலானவர்கள் மேயர் அன்பழகனுக்கு குடைச்சல் கொடுப்பதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். இதில் என்ன விநோதம் என்றால் அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் தான் அன்பழகனை அதிகம் சோதிக்கிறார்கள்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம், நேருவின் ஆதரவாளரான காஜாமலை விஜய், மேயர் அன்பழகன் தனது வார்டுக்கு எதுவுமே செய்யவில்லை எனச் சொல்லி மாநகராட்சி வளாகத்திலேயே தீக்குளிப்புப் போராட்டம் நடத்தினார். அதற்கு முந்தைய கூட்டத்தில், திமுக கவுன்சிலர்களான முத்துச்செல்வம், ராமதாஸ் ஆகியோர் மேயரைக் கண்டித்து மாமன்ற கூட்டத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.
அமைச்சர் அன்பில் மகேஸின் திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட அரியமங்கலம் குப்பைக் கிடங்கில் மகேஸின் விருப்பத்துக்கு மாறாக மீன் தீவன தொழிற்சாலைக்கு அனுமதி அளித்த மேயரைக் கண்டித்து துணை மேயர் திவ்யா தலைமையில் கடந்த ஜூலையில் மகேஸ் ஆதரவு கவுன்சிலர்கள் மாமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதேபோல் இன்னொரு கூட்டத்தில், தனது வார்டுக்கு மேயர் எதுவுமே செய்யாமல் அல்வா கொடுப்பதாகச் சொல்லிக் காட்டி மேயருக்கே அல்வா வாங்கிக் கொண்டுவந்து கொடுத்தார் திமுக கவுன்சிலர் பொற்கொடி.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த மாமன்றக் கூட்டத்தில் நிதிக்குழு தலைவரான முத்துச்செல்வம் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகன நிறுத்துமிடத்துக்கான டெண்டர் முறைகேடு குறித்து பிரச்சினை எழுப்பி தர்ணா செய்தார். அதே கூட்டத்தில், இன்னொரு திமுக கவுன்சிலரான ராமதாஸ், “நீங்கள் மேயர் இருக்கையில் உட்காரவே தகுதியற்றவர்” என அன்பழகனை வார்த்தைகளால் வசைபாடினார். இதைத் தாங்கிக் கொள்ளமுடியாத மேயர், அவருக்கு மாமன்றக் கூட்டங்களில் கலந்துகொள்ள இரண்டு மாதங்கள் தடைவிதித்ததும் நடந்தது.
இப்படி ஆளும் கட்சி கவுன்சிலர்களே தொடர்ந்து உங்களின் தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்களே என்று மேயர் அன்பழகனிடம் கேட்டதற்கு, “நான் தொடர்ந்து 5-வது முறையாக கவுன்சிலராக இருக்கிறேன். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளேன். மக்கள் ஆதரவு இல்லாமல் யாருமே தொடர்ந்து வெற்றிபெற முடியாது.
இது புரியாமல் காழ்ப்புணர்ச்சி மற்றும் பொறாமை காரணமாக எனக்கு எதிராக சிலர் மாமன்றத்தில், தொட்டதுக்கெல்லாம் பிரச்சினை செய்கிறார்கள். கூட்டம் நடப்பதற்கு முன்னதாக திமுக கவுன்சிலர்களை அழைத்து கூட்டம் போடுகிறோம். அப்போது எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்துவிட்டு வேண்டுமென்றே மாமன்றக் கூட்டத்தில் வந்து பிரச்சினை செய்கிறார்கள். இவர்கள் மீது தலைமை தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
ஊருக்கெல்லாம் பஞ்சாயத்து தலைவராக இருக்கும் அமைச்சர் நேரு உள்ளூர் பஞ்சாயத்தை எப்போது தீர்த்துவைக்கப் போகிறார்?