பாட்னா: பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரும் மத்திய அமைச்சர் அமித் ஷாவும் பாட்னாவில் நேற்று சந்தித்துப் பேசினர். அப்போது சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தி உள்ளனர்.
பிஹார் சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்பட உள்ளது. இதையடுத்து, அங்கு தேர்தல் பிரச்சாரம், அரசியல் கட்சிகள் இடையிலான தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை சூடுபிடித்துள்ளது. பிஹாரில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் இடம்பெற்றிருக்கிறது.
இந்நிலையில், நேற்று பாட்னா சென்ற மத்திய உள் துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா ஒரு ஓட்டலில் தங்கி இருந்தார். இதையடுத்து, பிஹார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார், அமித் ஷாவை ஓட்டலில் சந்தித்துப் பேசினார். நிதிஷ் குமார், அமித் ஷாவுக்கு பூங்கொத்து கொடுக்கும் புகைப்படத்தை இருவரும் எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்து
உள்ளனர்.
இந்த சந்திப்பின் போது இரு தலைவர்களும் பேரவைத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரம் இருதரப்பிலிருந்தும் அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் கடந்த வாரம் பாட்னா சென்றிருந்தனர். அப்போது அவர்களை முதல்வர் நிதிஷ் குமார் சந்திக்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியானது. இந்த சூழ்நிலையில்தான் நிதிஷ் குமார், அமித் ஷாவை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.