சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இமெயில் மூலம் இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு அகற்றும் நிபுணர்களை கொண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நீதிபதிகள் அறைகள் மற்றும் நீதிமன்ற அறைகளில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. பாதுகாப்புப் பணியாளர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கெனவே கடந்த மாதம் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதேபோல் கடந்த வாரம் சென்னை மாவட்ட நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. தற்போது மீண்டும் ஐகோர்ட்டுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் மும்பை உயர் நீதிமன்றத்துக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கும், சோதனை நடைபெற்று வருகிறது.
கடந்த 12-ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது இங்கே நினைவுகூரத்தக்கது.
நாடு முழுவதுமே பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவதாக அவ்வப்போது நடைபெறும் சூழலில் தற்போது நீதிமன்றங்களுக்கு மிரட்டல் விடுப்பது தொடர்கதையாகி வருகிறது.