சென்னை: அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் ஒருங்கிணைப்பாளர் இப்னு சஊத், அதன் உறுப்பினர் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா ஆகியோர் அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, சென்னையில் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது: வக்பு திருத்தச் சட்டம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தீர்ப்பில்,மத்திய வக்பு குழுமத்தின் உறுப்பினர்களில் அதிகபட்சம் 4 முஸ்லிம் அல்லாதோர், மாநில வக்பு வாரியங்களில் அதிகபட்சம் 3 முஸ்லிம் அல்லாதோர் இருக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அறநிலையத் துறை அல்லது குருத்வாரா நிர்வாகத்தில் அம்மதத்தைச் சாராதவர்கள் உறுப்பினர்களாக ஆக முடியாத நிலையில், வக்பு வாரியத்தில் மட்டும் முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களை இணைக்க வேண்டும் என்பது பாரபட்சமானது.
அதேபோல், வக்பு செய்வதற்கு ஒருவர் குறைந்தது 5 ஆண்டுகள் இஸ்லாத்தை பின்பற்றியவராக இருக்க வேண்டும் என்ற திருத்தப்பட்ட விதியை உச்ச நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தாலும், இஸ்லாத்தை பின்பற்றும் முஸ்லிம் யார் என்பது பற்றிய விதிமுறைகளை வரையறை செய்யும் உரிமை மாநில அரசுகளுக்கு தரப்பட்டுள்ளதும் ஆபத்தானது.
வக்பு திருத்த சட்டம், வக்பு சொத்துகளை முற்றிலும் அபகரிக்க திட்டமிட்டு செய்யப்பட்ட சதியாகும். இதுதொடர்பாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதல்வர்களையும் சந்தித்து விளக்கமளிக்க உள்ளோம்.
இந்தச் சட்டத்தை முழுமையாக ரத்து செய்து வக்பு சட்டம் 2013-ஐ நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடெங்கும் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு போராட்டங்கள், மாநாடுகள், பேரணிகள், சிறை நிரப்பும் தொடர் போராட்டங்களை நடத்தவும் அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் திட்டமிட்டுள்ளது. அதன் முடிவில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நவ.16-ம் தேதி நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்.