ஹைதராபாத்: சைபர் குற்றவாளிகளின் வலையில் சிக்கி ரூ.6.60 லட்சம் பணத்தை ஏமாந்த பெண் மருத்துவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
ஹைதராபாத்தை சேர்ந்த 76 வயதுள்ள ஒரு பெண் மருத்துவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் 6-ம் தேதி, பெங்களூரு போலீஸ் சின்னத்துடன் ஒரு வாட்ஸ்ஆப் கால் வந்துள்ளது. அதில் பேசியவர்கள், சிலரை வெளிநாட்டுக்கு விற்ற வழக்கு தொடர்பாக உச்சநீதி மன்றம், ரிசர்வ் வங்கி, கர்நாடக போலீஸ் மற்றும் அமலாக்கத் துறையினரின் போலி கைது வாரண்ட்களை வீடியோ கால் மூலம் காண்பித்து உங்களை ‘டிஜிட்டல் கைது’ செய்துள்ளோம் என மிரட்டி உள்ளனர். இதனால் பயந்து போன அவர், அவர்கள் கூறியபடி தன்னுடைய ஓய்வூதியத்தில் இருந்து ரூ.6.60 லட்சத்தை வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளார்.
போலி சைபர் குற்றவாளிகள் அவரை விடாமல், தொடர்ந்து தொந்தரவு கொடுத்துள்ளனர். இதனால், அந்த பெண் மருத்துவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் 8-ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை அறியாத அந்த சைபர் குற்றவாளிகள், தொடர்ந்து மேசேஜ்கள் மூலம் மிரட்டல் விடுத்தனர். இதனால், பெண் மருத்துவரின் குடும்பத்தார் இது குறித்து சமீபத்தில் ஹைதராபாத் சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார், குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.