சென்னை: பெரியாரின் பிறந்த நாள் தமிழக அரசின் சார்பில், சமூக நீதி நாளாக அனுசரிக்கப்பட்டது. அவரது படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினர். சமூக அடக்குமுறைகளை எதிர்த்து போராடியவர் என புகழாரம் சூட்டினர்.
பெரியாரின் 147-வது பிறந்த நாள் தமிழகம் முழுவதும் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தமிழக அரசு பெரியார் பிறந்த தினத்தை சமூக நீதி நாளாக கொண்டாடியது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள பெரியாரின் சிலைக்கு அருகே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, முதல்வர் தலைமையில் அனைவரும் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றனர்.
அதேபோல், அரசு சார்பில் சென்னையில் அண்ணாசாலையில் அமைந்துள்ள பெரியாரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, கீழே மலர்மாலையால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியாரின் உருவ படத்துக்கு அமைச்சர் பி.கே. சேகர்பாபு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், செய்தித் துறை செயலர் வே.ராஜாராமன், செய்தி த்துறை இயக்குநர் இரா.வைத்திநாதன் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.
அதிமுக சார்பில் மரியாதை: அதிமுக சார்பில், அண்ணாசாலையில் அண்ணா மேம்பாலம் கீழே அமைந்துள்ள பெரியாரின் சிலைக்கு கட்சியின் அவைத் தலைவர் அ.தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பா.பெஞ்சமின் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோரும் மரியாதை செலுத்தினர். தமிழக காங்கிரஸ் சார்பில், சென்னை சத்தியமூர்த்தி பவனில், பெரியார் படத்துக்கு மாநில தலைவர் கு.செல்வப்பெருந்தகை மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
வேப்பேரி, பெரியார் திடலில் உள்ள பெரியார் சிலைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.முத்தரசன், மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். எழும்பூரில் உள்ள மதிமுக தலைமையகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவும், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமையகத்தில் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் பார்த்தசாரதியும், விழுப்புரத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் போயஸ் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் வி.கே.சசிகலாவும் பெரியார் படத்துக்கு மலர் தூவிமரியாதை செலுத்தினார்.
முதல்வர் வாழ்த்து: பெரியாரின் பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “தந்தை பெரியார் இனப்பகையைச் சுட்டெரிக்கும் பெருநெருப்பு. தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி. பெரியார் என்றும், எங்கும் நிலைத்தி ருப்பார்” என குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தனது பதிவில்,‘‘ பகுத்தறிவு பகலவனின் பிறந்த நாளில் அவர் வகுத்த சமூக நீதிப்பாதையில் என்றும் பயணித்து, உண்மையான சமத்துவ ஆட்சியை, அதிமுக தலைமையில் 2026-ல் அமைக்க உறுதியேற்போம்’’ என தெரிவித்துள்ளார்.
முதல்வர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த பெரியார் படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செய்தார்.
அதன்பின், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்ற முதல்வர் ஸ்டாலின், பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்து சமூக நீதி நாள் உறுதிமொழியை வாசிக்க, அங்கு கூடியிருந்த அரசு அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.