புதுடெல்லி: இருபது ஆண்டுக்கு மேல் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு முழு ஓய்வூதிய பயன் பெற உரிமை உள்ளது. மத்திய பணியாளர் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத் துறை மத்திய சிவில் சேவை விதிகள், 2025–ஐ கடந்த 2-ம் தேதி அரசிதழில் அறிவித்தது.
இவ்விதிகள், தேசிய ஓய்வூதிய திட்டத்தின் (NPS) கீழ் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) விருப்பமாகத் தேர்ந்தெடுக்கும் மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதிய நன்மைகள் மற்றும் பணிசார் விஷயங்களை ஒழுங்குபடுத்துகின்றன.
இந்த விதிகள் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை தேர்ந்தெடுத்துள்ள ஊழியர்களுக்கு, 20 ஆண்டுகள் பணியாற்றி பிறகு விருப்ப ஓய்வு (விஆர்எஸ்) பெறும் வாய்ப்பை வழங்குகிறது.
மத்திய பணியாளர் நலத்துறை வெளியிட்ட அறிக்கையில், ‘‘ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் முழு பயன் 25 ஆண்டுகள் பணியை நிறைவு செய்த பின்னரே வழங்கப்படும். ஆனால், 20 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பணியை நிறைவு செய்த பின் விருப்ப ஓய்வு பெற்றால் முழு ஓய்வூதிய பயன் வழங்கப்படும்’’ என கூறப்பட்டுள்ளது.