துபாய்: ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் துபாயில் இன்று இரவு 8 மணிக்கு ‘ஏ’ பிரிவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் – ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுக்குமே இது கடைசி லீக் ஆட்டம் ஆகும்.
சல்மான் அலி ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணி முதல் ஆட்டத்தில் 93 ரன்கள் வித்தியாசத்தில் ஓமன் அணியை தோற்கடித்து இருந்தது. ஆனால் 2-வது ஆட்டத்தில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வி கண்டது.
ஐக்கிய அரபு அமீகரம் தனது முதல் ஆட்டத்தில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் வீழ்ந்திருந்தது. ஆனால் 2-வது ஆட்டத்தில் 42 ரன்கள் வித்தியாசத்தில் ஓமன் அணியை தோற்கடித்தது. இன்றைய ஆட்டம் இரு அணிகளுக்குமே முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் இரு அணிகளுமே தலா 2 புள்ளிகளுடன் உள்ளன. இதனால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியே ‘ஏ’ பிரிவில் இருந்து 2-வது அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும்.
ஏற்கெனேவே இந்த பிரிவில் இந்திய அணி 4 புள்ளிகளுடன் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிவிட்டது. நேற்று முன்தினம் ஓமன் அணிக்கு எதிராக ஐக்கிய அரபு அமீரகம் வெற்றி பெற்றிருந்தது. இந்த ஆட்டத்தின் முடிவே இந்திய அணி சூப்பர் 4 சுற்றில் கால்பதிப்பதை உறுதிப்படுத்தியது.