சென்னை: ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து 6 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அடுத்த மாதத்தில் ஆயுதபூஜை, விஜயதசமி, தீபாவளி பண்டிகை ஆகியவை அடுத்தடுத்து வர உள்ளன. இதை முன்னிட்டு, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் பயணிகள் வசதிக்காக 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து செப்.25, அக்.2, 9, 16, 23 ஆகிய தேதிகளில் இரவு 11.50 மணிக்கு அதிவிரைவு வாராந்திர சிறப்பு ரயில் (06123) புறப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணிக்கு போத்தனூரை சென்றடையும். மறுமார்க்கமாக, போத்தனூரில் இருந்து செப்.26, அக்.3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் மாலை 6.30 மணிக்கு சிறப்பு ரயில் (06124) புறப்பட்டு, மறுநாள்அதிகாலை 3.15 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்து அடையும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து செப்.24, அக். 1, 8, 15, 22 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.10 மணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் (06121) புறப்பட்டு, மறுநாள் காலை 6.30 மணிக்கு செங்கோட்டையை சென்றடையும். மறுமார்க்கமாக, செங்கோட்டையில் இருந்து செப்.25, அக்.2, 9, 16,23 ஆகிய தேதிகளில் இரவு 9 மணிக்கு சிறப்பு ரயில் (06122) புறப்பட்டு, மறுநாள் முற்பகல் 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.
நாகர்கோவிலில் இருந்து செப்.28, அக்.5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் இரவு 11.15 மணிக்கு சிறப்பு ரயில் (06012) புறப்பட்டு, மறுநாள் பகல் 12.30 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து செப்.29, அக்.6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் முற்பகல் 3.30 மணிக்கு சிறப்பு ரயில் (06011) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.
திருநெல்வேலியில் இருந்து செப்.25, அக்.2, 9, 16, 23 ஆகிய தேதிகளில் இரவு 9.30 மணிக்கு சிறப்பு ரயில் (06070) புறப்பட்டு, மறுநாள் காலை 10 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். மறுமார்க்கமாக, சென்னை எழும்பூரில் இருந்து செப்.26, அக்.3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் நண்பகல் 12.30 மணிக்கு சிறப்பு ரயில் (06069) புறப்பட்டு,மறுநாள் அதிகாலை 1.30 மணிக்குதிருநெல்வேலியை சென்று அடையும்.
இதுதவிர, சென்னை எழும்பூர் – தூத்துக்குடி இடையேவும்,சென்னை சென்ட்ரல் – நாகர்கோவில் இடையேவும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்தசிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று (17-ம்தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.